கூற்றம் உயிர்கொள்ளும் போழ்து குறிப்பறிந்து
மாற்றம் உடையாரை ஆராயாது - ஆற்றவும்
முல்லை புரையும் முறுவலாய்! செய்வதென்
வல்லை அரசாட் கொளின். (பாடல்-110)
முல்லை மலரை ஒத்த புன்முறுவலை உடையாய்! இயமன் உயிரினைக் கொள்ளுங்காலத்தில், அவர்தங் குறிப்பினையும், தன்னால் உயிர்கொள்ளப் படுதலுடையார் கூறும் மாற்றத்தினையும் ஆராய்ந்து அறிவதில்லை; (அதுபோல), அரசன் குடிகளை மிகவும் விரைந்து துன்புறுத்தி அடிமை கொள்ளின் செய்வது என்ன இருக்கின்றது? (க-து.) குடிகளை முறையின்றித் துன்புறுத்தி அடிமை கொள்ளும் அரசன் கூற்றுவனை ஒப்பான். "செய்வதென் வல்லை அரசாட் கொளின்' என்பது பழமொழி.