சைவக் குரவர்களான அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் இறைவன் திருமேனி அழகை பல்வேறு பாடல்களில் மனம் உருகப் பாடியுள்ளனர். அவர்தம் பாட்டின் மொழியும் பண்ணும் நம்மை நெகிழ வைப்பவை. அங்ஙனம் அணிசெய்யப்பெற்ற இறைவனைக் காணும் வள்ளலார் இறைவனின் அழகில் தன்னை மறந்து, மயங்கி, அவ்வழகிற்குக் கண்ணேறு படுமென்று கவலை கொள்கிறார்.
அத்திருவடியை நினைந்திருந்தலைக் கண்ணுற்ற தோழி, "அடிக்கீழ் இருப்பது அழகோ?' என ஏகடியம் செய்ய, "யோக நிலையில் பல நிலை கடந்து இறைவனோடு ஐக்கியம் ஆகும் நிலைகளுள் ஒன்றெனத் தோழிக்கு உரைத்து, அத்தகு இறைவர்க்கு கண்ணேறு கழித்தல், இவ்வுலகத்தார்க்கெல்லாம் கண்ணேறு கழித்தலாகும்' என்றும் கூறுகிறார் வள்ளலார் சுவாமிகள்.
கற்பூரம் கொணர்ந்திடுக தனித்தோழி எனது
கணவர் வருதருணம் இது கண்ணாறு கழிப்பாம்
எற்பூத நிலை அவர்தம் திருவடித் தாமரைக்கீழ்
இருப்பதடிக்கீழ் இருப்பதென்று நினையேல்! காண்!
பற்பூத நிலைகடந்து நாதநிலைக்கப்பால்
பரநாத நிலை அதன்மேல் விளங்குகின்ற தறிநீ
இற்பூவை அவ்வடிக்குக் கண்ணாறு கழித்தால்
எவ்வுலகத் தெவ்வுயிர்க்கும் இனிது நலம் தருமே!
(திருவருட்பா, திருமுறை-6, அனுபவ மாலை, பா.15)