நாடி நமரென்று நன்கு புரந்தாரைக்
கேடு பிறரோடு சூழ்தல் கிளர்மணி
நீடுகல் வெற்ப! நினைப்பின்றித் தாமிருந்த
கோடு குறைத்து விடல் (பா-81)
விளங்குகின்ற மணிகள் பொருந்திய நீண்ட கற்பாறைகளையுடைய மலை நாடனே! ஆராய்ந்து நம்மவர் என்று கருதி வேண்டியன உதவி நன்றாகக் காப்பாற்றியவர்களை, காப்பாற்றப்பட்டவர்கள் அவர்க்குச் செய்யத்தக்க தீமையை அவர் பகைவரோடு சேர்ந்து எண்ணுதல், ஒருவன் உணர்வின்றித் தான் தங்கியிருந்த கோட்டின் அடியை வெட்டி வீழ்த்தி உயிர்விடுதலை யொக்கும். (க-து) செய்த உதவியை மறந்து தீமை செய்பவன் பற்றுக்கோடின்றி அழிவது விதி. "தாமிருந்த கோடு குறைத்துவிடல்' என்பது பழமொழி.