எனக்குத் தகவன்றால் என்பதே நோக்கித்
தனக்குக் கரியாவான் தானாய்த் - தவற்றை
நினைத்துத்தன் கைகுறைத்தான் தென்னவனும் காணார்
எனச்செய்யார் மாணா வினை. (பா-102)
பாண்டியனும், எனக்குத் தகுதியன்று என்பதனை ஆராய்ந்து அறிந்து, தனக்குச் சான்றாவான் தானேயாய் நின்று, கதவையிடித்த குற்றத்தை நினைத்து தனது கையை வெட்டி வீழ்த்தினான். (ஆகையால்) அறிவுடையோர் பிறர் காண்டலிலர் என்பது கருதிச் செய்தலிலர் மாட்சிமைப்படாத செயலை. (க-து.) அறிவுடையோர் பிறர் காணாமை கருதித் தீய செயல்களைச் செய்யார். "காணார் எனச் செய்யார் மாணா வினை' என்பது பழமொழி.