பழமொழி நானூறு
நல்லவும் தீயவும் நாடிப் பிறருரைக்கும்
நல்ல பிறவும் உணர்வாரைக் கட்டுரையின்
வல்லிதின் நாடி வலிப்பதே புல்லத்தைப்
புல்லம் புறம்புல்லு மாறு. (பா-104)
நல்லனவற்றையும் தீயனவற்றையும் நூல்களால் ஆராய்ந்து அறிந்து, மாறு கொண்ட இருவர் கூறும் கட்டுரை யொன்றானே, நீதி - அநீதி என்பனவற்றை அறியும் அமைச்சர்களை ஆழ்ந்து ஆராய்ந்து தம்மோடு கொண்டு அரசன் வாழ்தலே, ஆனேறு ஆனேற்றோடு இணைந்து அன்பு பூண்டு ஒழுகுமாறு போலும். (க-து.)
அரசன், அறிவான்மிக்க அமைச்சர்களோடுகூடி யொழுகின் அரச காரியங்கள் இனிது நடைபெறும் என்பதாம்.
"புல்லத்தைப் புல்லம் புறம்புல்லு மாறு' என்பது பழமொழி.