அகத்துறை இலக்கணத்தில் "உள்ளுறை உவமம்' என்று ஒன்றுண்டு. அகத்துறையை வைத்து அகக் காட்சியைப் படம் பிடித்துக் காட்டும்பொழுது மிகவும் சுவையாக அமையும். அவ்வகையில், நற்றிணையில் ஓர் அகத்துறைக் காட்சி.
மரத்தினின்றும் ஒரு நாவற்பழம் கீழே விழுகிறது. பறக்கும் வண்டுகள் அப்பழம் தம் இனத்தைச் சார்ந்தது என்று அப்பழத்தைச் சூழ்ந்து கொள்கின்றன. அந்தப் பக்கமாக வந்த ஒரு நண்டு இது பழம் என்றெண்ணி அதைக் கவ்வியது. வண்டுகள் அனைத்தும் ரீங்காரம் செய்துகொண்டு அங்குமிங்கும் பறந்தன. அந்தப் பக்கமாக வந்த நாரை ஒன்று இதைப் பார்த்து, "பெரிய சண்டை நடக்கிறது போலிருக்கிறது. நாம் போய் நண்டுக்கும் வண்டுக்கும் சமரசம் செய்து வைப்போம்' என்று எண்ணி சமரசமும் செய்து வைத்தது.
"புன்கால் நாவற் பொதிப்புற இருங்கனி
கிளைசெத்து மொய்த்த தும்பி பழஞ்சொத்துப்
பல்கால் அலவன் கொண்டகோள் கூர்ந்து
கொள்ளா நரம்பின் இமிரும் பூசல்
இரை தோர் நாரை எய்தி விடுக்கும்' (நற்-35)
இக்காட்சியின் மூலம் அம்மூனார் ஒரு சிறந்த அகத்துறைக் காட்சியை எடுத்துக் காட்டுகின்றார். இதுவே உள்ளுறை உவமம் எனப்படுகிறது. நாவற்கனியைத் தலைவியாகவும், நாரையைத் தலைவனாகவும், பறக்கும் வண்டுகளும் நண்டின் செயலும் காதலுக்கு வந்த தடையாகவும் பாவித்துக் கவி புனைந்துள்ளார். நாவற்கனியாகிய தலைவியை நாரையாகிய தலைவன் தடைகளை எல்லாம் நீக்கித் திருமணம் செய்து கொண்டான் என்பதையே இதன் மூலம் வலியுறுத்துகின்றார்.
-இராம.வேதநாயகம்