அடங்கி அகப்பட ஐந்தினைக் காத்துத்
தொடங்கிய மூன்றினால் மாண்டீண் - டுடம்பொழியச்
செல்லும்வாய்க் கேமம் சிறுகாலைச் செய்யாரே
கொல்லிமேல் கொட்டுவைத் தார். (பா-99)
துறவறத்திற்கு விதிக்கப்பட்ட நெறியின்கண் தாம் அடங்கி ஒழுகி, ஐம் புலன்களையும் பொறிகள் மேற் சொல்லாதவாறு செறியப் பாதுகாவல் செய்து, தாம் செய்யத் தொடங்கிய துறவற நெறியில் மனம், மொழி, மெய் என்ற மூன்றானுந் தூயராய் மாட்சிமைப்பட்டு, இவ்வுலகத்தின்கண் இவ்வுடம்பு ஒழிந்து நிற்க, இனிச் செல்லவிருக்கும் மறுமைக்கு உறுதியைக் காலம்பெறச் செய்யாதவர்களே, தீயின் மீது நெல்லினைப் பெய்து பொரித்து உண்ணுபவரோ டொப்பர். "கொல்லிமேல் கொட்டு வைத்தார்' என்பது பழமொழி.