வியக்க வைக்கிறது!
புலவர் அழகிய சொக்கநாதப் பிள்ளையின் புலமைக்குச் சான்றாகத் தந்திருக்கும் "புதையல் - சொல் விளையாட்டில்' தமிழின் செழுமை தெரிகிறது. கலாரசிகன் விமர்சனம் செய்திருந்த "எத்தனை கோடி உயிர்கள் எனக்குள்' எனும் புத்தகத்தில் தாய்ப்பாலில் காணப்படும் நூற்றுக்கணக்கான சர்க்கரையில் குழந்தைக்கானது கொஞ்சமே. மீதி உள்ளவை குழந்தையின் வயிற்றில் வளரும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கான உணவே என்பது உண்மையே!. வயிற்றுப்போக்கு ஏற்படும்போது அதனுடனே நன்மை செய்யும் பாக்டீரியாக்களும் உடனே வெளியேறிவிடும். அதனை உற்பத்தி செய்யவல்லது தயிர் அல்லது மோர் என்பதால்தான் அப்பொழுது அவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளச் சொன்னார்கள் நம் முன்னோர். அவர்களுடைய அறிவியலறிவு வியக்க வைக்கிறது!
ப.தாணப்பன், தச்சநல்லூர்.
பெருவழக்கன்று
"பன்னிரண்டு மாதம் கருப்பம்' கட்டுரை படித்தேன். எந்தக் காலத்திலும், எந்த நாட்டிலும் 12 மாதக் கருப்பம் கிடையாது. இதன் உண்மையை
ஆண்-பெண் உடல்கூறுகளால் உணர வேண்டும். திருமணமான ஆணிடம் அடங்கிக் கிடக்கும் கருக்கூறு இரண்டு மாத அளவில் பெண்ணிடம் பாயும் நிலையில் உருவாகும் கரு, முதல் மாதக் குழந்தையாய்க் கணக்கிடும்போது, ஆணிடம் வளர்ந்த இரண்டு மாதங்களையும் பிரசவத்தின் பத்து மாதங்களோடு சேர்த்து கணக்கிடுவதால், 12 மாதம் கருப்பம் எனக் கணக்குக் கூறுவர். இதைத்தான் குறுந்தொகைப் பாடலும், ஆழ்வார் பாடலும் சான்றாகக் கூறியுள்ளன. ஆனால், இவ்வழக்கு பெருவழக்கன்று.
"தக்க தசமதி(10 மாதம்) தாயொடு தான்படும்'
(போ.தி.469) என்று திருவாசகமும்; "அறிய ஈரைந்து ஆனது பிண்டம்' என்று திருமந்திரமும்; தாய் "ஐயிரு திங்களாய் அங்கமெலாம் நொந்து' பெற்றதைப் பட்டினத்தார் பாடலும்; "நாலாறு மாதமாய் (4+6)
குயவனை வேண்டி' என்ற சித்தர் பாடலும் பத்து மாதத்தில் குழந்தை பிறப்பதை உறுதிப்படுத்துகின்றன.
தெ.முருகசாமி, புதுச்சேரி.