பழமொழி நானூறு
அருவிலை மாண்கலனும் ஆன்ற பொருளும்
திருவுடையார் ஆயின் திரிந்தும் - வருமால்
பெருவரை நாட! பிரிவின்(று) அதனால்
திருவினும் திட்பம் பெறும். (பாடல்-136)
பெரிய மலை நாட்டை உடையவனே! செல்வம் உடையவர்களுக்கு ஆயின், (அவர்தம்) அரிய விலையுடைய மாட்சிமைப்பட்ட பூண்களும், நிறைந்த செல்வமும் நிலைபெறாது மாறி வரும் இயல்பை உடையன. (அறிவுச் செல்வம் உடையோர்க்கு ஆயின் அவர் தம் செல்வம்) பிரிதலில்லை. அத்தன்மையால், செல்வத்தினும் அறிவே உயர்வைப் பெறும். (க-து.) அறிவுச்செல்வம் பொருட் செல்வம்போல் பிரிதலில்லாமையால் அதனையே தேடுதல் வேண்டும். "திருவினும் திட்பம் பெறும்' என்பது இச்செய்யுளில் வந்த பழமொழி.