கற்றானும் கற்றார்வாய்க் கேட்டானும் இல்லாதார்
தெற்ற உணரார் பொருள்களை - எற்றேல்
அறிவில்லான் மெய்தலைப் பாடு பிறிதில்லை
நாவல்கீழ்ப் பெற்ற கனி. (பாடல்-138)
நூல்களைத் தாமே கற்றாயினும் கற்றவர்களிடம் கேட்டாயினும், கல்வி கேள்வி இல்லாதவர்கள் பொருள்களின் உண்மையைத் தெளிவாக அறியார்கள். கல்வி கேள்விகளின் அறிவு இல்லாதான் உண்மைப் பொருள்களை ஒருகால் அறிதல், எத்தன்மைத் தெனில், நாவல் மரத்தின் அடியில் தானே விழுந்த கனியைப் போல்வதன்றி, கல்வி கேள்விகளுள் எதுவும் காரணமாக இல்லை. "நாவல்கீழ்ப் பெற்ற கனி' என்பது இச் செய்யுளில் வந்த பழமொழி.