பண்டின ரென்று தமரையும் தம்மையும்
கொண்ட வகையால் குறைதீர நோக்கியக்கால்
விண்டவரோ டொன்றிப் புறனுரைப்பின் அஃதாலவ்
வுண்டவில் தீயிடு மாறு. (பாடல் -133)
முன்பு இத்தன்மையுடையார் என்று தம் சுற்றத்தாரையும் தன்னையும் ஏற்றுக்கொண்ட சிறப்பு வகையாலேயே, குறை தீருமாறு நோக்கியவிடத்து, நோக்கப்பட்டார் வேறு பகைவரோடு சேர்ந்து புறங்கூறுதலுறின், இனிய உணவு ஏற்ற அவ்வீட்டிலேயே நெருப்பு இடுமாற்றை ஒப்பது அதுவேயாம். (க-து.) செய்ந்நன்றி கோறல் பழிக்குக் காரணமாம். "உண்டஇல் தீயிடு மாறு' என்பது பழமொழி.