தலைவனைக் காணாத தலைவி பசலையுற்றாள். பசலை நீங்க அவள் தலைவனின் மலையைப் பார்க்கச் சென்றாளாம். உடனே பசலை நீங்கப் பெற்று பரவசம் அடைந்தாளாம்.
அவர் நாட்டுக் குன்றம் நோக்கினேன் தோழி
பண்டையற்றோ கண்டிசின் நுதலே (குறுந்:249)
டாக்டர் மு.வ. சொல்வதைப் போல், ஆராய்ச்சி அறிவு வேண்டாம். உயர்திணை, அஃறிணை இயங்குவன, இயங்காதன என வேண்டாம் வேறுபாடுகள். குழந்தை மனப்பான்மையோடு குதூகலமாய் இருந்தால் ரசித்து இன்பம் துய்க்கலாம்.
வானமும் அறியா அடர்மழை. நீர் பரந்து ஓடுவதால் நிலமும் தெரியவில்லை. ஒளியற்று இருள் பரவிய இருட்டு ஊர் உறங்கும் நள்ளிரவில் தலைவியைத் தேடிவந்த தலைவனை, வேங்கை மரம் பூத்து மணம் கமழும் இருளில் மலர் மணம்தான் எம் சிற்றூருக்கு வழிகாட்டியதோ என வியப்புறுகின்றனர் தலைவியும் தோழியும்
பெயல்கண் மறைத்தலின் விசும்பு காணலையே;
நீர்பரத் தொழுகலின் நிலம் காணலையே;
எல்லை சேரலின் இருள் பெரிது பட்டன்று;
பல்லோர் துஞ்சும் பானாட் கங்குல்
யாங்கு வந்தனையோ ஓங்கல் வெற்ப
வேங்கை கமழும் எம்சிறுகுடி
யாங்கு அறிந்தனையோ நோகோ யானே! (குறுந்: 355)
என்பது கபிலரின் பாடல். எப்படி வந்தனை என வருந்தும் தலைவிக்கு தலைவனின் பதில், "எல்லை சேரலின் இருள் பெரிது பட்டன்று' வேறு என்னவாக இருக்க இயலும்? முன்னோர் தேடிவைத்த செல்வம். இதனை முயன்று இன்பம் காணுதலே முத்தமிழ் இன்பம்.