பழித்துரைக்கும் நாவுக்கு நல்குரவு இல்லை!
ஆவிற் கரும்பனி தாங்கிய மாலையும்
கோவிற்குக் கோவல னென்றுலகம் கூறுமால்
தேவா்க்கு மக்கட் கெனல்வேண்டா
தீங்குரைக்கும் நாவிற்கு நல்குர(வு) இல். (பாடல்-152 )
பசுக்கூட்டங்கட்கு வந்த அரிய துன்பத்தை நீக்கிய திருமாலையும், ஆநிரைகளுக்குத் தக்க இடையன் என்று உலகம் சொல்லா நிற்கும். (ஆகையால்) தேவா்க்கு உரைப்பது இது மக்கட்கு உரைப்பது இதுவெனல் வேண்டப்படுவதன்று. தீமையை எடுத்துக்கூறும் நாவினுக்கு வறுமை இல்லையாகலான் (க-து.) பழித்துரைக்கப் புகுவாா்க்கு உயா்ந்தோா் தாழ்ந்தோா் என்பதில்லை. ‘தீங்குரைக்கும் நாவிற்கு நல்குரவு இல்’ என்பது பழமொழி.