காதலின் மேன்மையை உணர்த்தும் பாங்கில் குறுந்தொகைப் பாடல் காட்சி ஒன்றில், தோழன் ஒருவன், காதல் வயப்பட்ட தலைவனை இடித்துரைக்கின்றான்.
அதற்குத் தலைவன், ""நண்பா! நீர் வாழ்வீராக! கேளிர் எப்பொழுதும் என்னுடைய நெஞ்சத்தைத் தன்னிடத்திலே பிணித்துக்கொண்ட அழகிய சிலவாகிய கூந்தலையும் பெரிய தோளையும் உடைய இளைய தலைவியினது சிறிய மெல்லிய மேனியை ஒரு நாள் எம் ஐம்புலனும் இயையும்படி அளவளாவுவேனாயின் யான் அதன் பின் அரை நாளேனும் வாழ்தலை விரும்பேன்'' என்கிறான்.
சிறுபொழுது வாழ்ந்தாலும் தன் மனை வாழ்க்கை, தன் மனம் கவர்ந்தவளோடுதான் அமைய வேண்டும் என்பதையும், "தலைவி எனக்கு மிகவும் இன்றியமையாதவள்' என்பதையும் நாகரிகமாக எடுத்துரைக்கிறான். தன்னை இடித்துரைத்த பாங்கனை நோக்கித் தலைவன் தலைவியினது அருமையை எடுத்துரைக்கும் இப்பாடல் குறிஞ்சித் திணையில் அமைந்தது; புலவர் நக்கீரனார் இயற்றியது.
"கேளிர் வாழியோ! கேளிர் நாளுமென்
நெஞ்சுபிணிக் கொண்ட அஞ்சி லோதிப்
பெருந்தோட் குறுமகள் சிறுமெல் லாகம்
ஒரு நாள் புணரப் புணரின் அரைநாள்
வாழ்க்கையும் வேண்டலென் யானே (பா.280)