பத்துப்பாட்டில் ஒன்றான "பெரும்பாணாற்றுப்படை'யின் நாயகன் தொண்டைமான் இளந்திரையனின் முற்றச் சிறப்பைக் "கடியலூர் உருத்திரங்கண்ணனார்காட்சிப் படுத்துகின்றார். கருணை பொழிவதும் கடுகி அழிப்பதும் அவனுக்கு எளிது ஆதலின் பகைவர் ஊர் அழியும்-பணிந்தவர் ஊர் செல்வம் கொழிக்கும்.
"அளியும் தெறலும் எளிய ஆகலின்
மலைத்தோர்தே எம்மன்றம் பாழ்பட
நயந்தோர்தே எம்நன் பொன்பூப்ப...'
"நட்பு கொள்ள இளந்திரையனை நெருங்குவோரும் தான் வலிமைபெற வேண்டி அவன் துணையை விரும்புவோரும் என சிற்றரசர்கள் மலையில் இருந்து இறங்கிவரும் அருவி, திரைகடலில் சேர்வதுபோல் இளந்திரையனிடம் வந்து பணிந்து நின்றனர்.
நட்புக் கொளல் வேண்டி, நயந்தி சினோரும்,
துப்புக் கொளல் வேண்டிய துணையிலோரும்
கல்வீழ் அருவிகடற் படர்ந் தாங்கு'
பல்வேறு வகையில் பணிந்து மன்னர் கொண்டு வந்த திறையைத் தொண்டைமானிடம் உடனே கொடுக்க முடிந்ததா? இல்லை. நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். இதற்கு உருத்திரங்கண்ணனார் ஓர் உவமை சொல்கின்றார்.
இமயத்தில் இருந்து, கொழித்த பொன்கொண்டு வரும் கங்கையைக் கடக்க வேண்டும். வெள்ளம் பாயும் கங்கை என்பதால் கடப்பது எளிதானது அன்று. அதற்காகக் காத்திருப்பவர்களோ நிறைய பயணிகள். அச்சத்தோடு காத்திருக்கின்றார்கள். அங்கிருப்பதோ ஒரே ஒரு தோணி. முறைவரும் வரை சோர்வுடன் தூங்கிக் காத்திருந்து, பின் தோணி ஏறும் பயணிகளைப் போல்- திறைப் பொருள்களோடு முற்றத்தில் நெருக்கியடித்து, இளந்திரையனைக்காண, ஏற்ற சமயத்திற்காக சிற்றரசர்கள் காத்திருந்தனர்.
எளிதாகக் கடக்க இயலாத கங்கை என்றது - எளிதாக சந்திக்க இயலாத வகையில் உள்ள நெடிய வரிசையைச் சொல்கின்றார் புலவர்.
நெடுங்கோட்டு...
பொன்கொழித்து இழிதரும் போக்கு
அருங்கங்கைப் பெருநீர் போகும்
இரியல் மாக்கள் ஒருமரப் பாணியில்
தூங்கியாங்கு தொய்யா வெறுக்கையோடு
துவன்று புகுழீஇ செவ்வி
பார்க்கும் செழுநகர் முற்றத்து