ஆமாலோ என்று பெரியாரை முன்னின்று
தாமாச் சிறியார் தறுகண்மை செய்தொழுகல்,
போமாறு அறியாப் புலன்மயங்கி ஊர்புக்குச்
சாமாகண் காணாத வாறு. (பாடல்- 233)
நமக்கு இவரோடு மாறுபடுதல் ஆகுமோ என்பதைக் கருதாதவராகத் தாமாகவே பெரியார் முன் வலிய எதிரிட்டுச் சென்று சிறுமையுடையோர், அவரைத் தறுகண்மை செய்து நடத்தல், அப்படி நடந்த சிறுமையாளர்க்கே அழிவைத் தரும். அது, தாம் போகும் வழியறியாத மாக்கள், புலத்தை மயங்க உணர்ந்து, ஊரினுள்ளே பிறர் கண்காணாதவாறு புகுந்து திருட முயன்று, அம்முயற்சியிலே செத்து அழிவதைப் போன்றதாகும். "போமாறு அறியாப் புலன்மயங்கி ஊர்புக்குச் சாமாகண் காணாத வாறு' என்பது பழமொழி.