செல்வம் ஊழால் அமைவது
ஆஅய் வளர்ந்த அணிநெடும் பெண்ணையை
ஏஎய் இரவெல்லாம் காத்தலும் - வாஅய்ப்
படற்பாலார் கண்ணே படுமே; பொறியும்
தொடற்பாலார் கண்ணே தொடும். (பாடல்-205)
உண்டாகி வளர்ந்த அழகிய உயர்ந்த பனைமரத்தை, அதன் பழத்தைப் பெறுவதற்கு விரும்பி அடைந்து இரவெல்லாம் அதனடியிலே காத்துக் கிடந்தாலும், தம் வாயினிடத்தே படுதற்குரிய நல்ல ஊழ் உள்ளவரிடத்திலேயே அந்தப் பனம் பழம் கிடைக்கும்.
அதுபோலவே, இலக்குமியும் (செல்வம்) சென்று தீண்டுதற்கு உரியவரிடத்திலேயே சென்று தீண்டுவாள். செல்வம் முயற்சியால் மட்டும் வராது; முன்வினைப் பயனாக நல்ல ஊழும் வேண்டும். "பொறியும் தொடற்பாலார் கண்ணே தொடும்' என்பது பழமொழி.