பழமொழி நானூறு
வினைப்பயன் ஒன்றின்றி வேற்றுமை கொண்டு
நினைத்துப் பிறர்பணியச் செய்யாமை வேண்டும்
புனப்பொன் அவிர்சுணங்கின் பூங்கொம்பர் அன்னாய்!
தனக்கின்னா இன்னா பிறர்க்கு. (பா.266)
புனங்களிலே விளங்கும் பொன்போன்ற மகரந்தங்களைச் சொரிந்து கொண்டிருக்கும் பூங்கொம்பைப் போன்ற அழகுத் தேமல்களை உடையவளே! நினக்குத் துன்பம் தருவதாக இருப்பது பிறருக்கும் துன்பம் தருவதே என்பதை அறிவாயாக. அதனால், செயலின் பயன் ஒன்றேனும் இல்லாமல், மன வேற்றுமை ஒன்றையே உள்ளத்திலே கொண்டு, அதனையே நினைத்து நினைத்துப் பிறர் துயரம் கொள்ளும் செயல்களைச் செய்யாமல் இருக்க வேண்டும். "தனக்கின்னா இன்னா பிறர்க்கு' என்பது பழமொழி.