மறாஅ தவனும் பலரொன் றிரந்தால்
பெறாஅ அன்பேதுறுதல் எண்ணிப்-பொறாஅன்
கரந்துள்ள தூஉம் மறைக்கும் அதனால்
இரந்தூட்குப் பன்மையோ தீது. (பாடல்-240)
தன்னிடம் வந்து கேட்பவர்களுக்கு எதனையும் மறுக்கும் இயல்பில்லாதவனும், பலரும் தன்னிடத்தேயுள்ள ஒரு பொருளை வந்து யாசித்தால், அதனை அனைவருக்கும் கொடுக்க முடியாததனால், அவர்களுள் பெறாதவன் மயக்கம் அடைதலை நினைத்து மனம் பொறாதவனாகி, தன்னிடத்தே உள்ள அப்பொருளை ஒளித்துவைத்து இல்லையென்று மறைப்பான். அதனால், யாசித்து உண்பதற்குப் பலராகச் செல்லுதல் எப்போதும் தீமையையே தருவதாகும்."இரந்தூட்குப் பன்மையோ தீது' என்பது பழமொழி.