இனியாரை உற்ற இடர்தீர உபாயம்
முனியார் செயினும் மொழியால் முடியா
துளியால் திரையுலாம் தூங்குநீர்ச் சேர்ப்ப!
பனியால் குளநிறைதல் இல். (பாடல்-236)
அலைகள் கடுமையாக வந்து மோதிச் செல்லும் கடற்கரையை உடைய தலைவனே! மழை பெய்தாலல்லாமல் பனி பெய்தலால் குளம் ஒருபோதும் நிறைவதில்லை. அதுபோல, தமக்கு இனியவரான ஒருவருக்கு நேர்ந்த துன்பம் தீர்வதற்கான உபாயத்தைக் கொஞ்சமும் வெறுப்பில்லாமல் செய்பவர் ஆனாலும், வெறும் வார்த்தைகளால் மட்டுமே அதனைத் தீர்க்க முடியாது. "வாய் உபசாரத்தால் மட்டும் பயனில்லை; பொருளாலும் செயலாலும் உதவ வேண்டும்' என்பது கருத்து. "பனியால் குளம் நிறைதல் இல்' என்பது பழமொழி.