முயறலே வேண்டா; முனிவரை யானும்
இயல்பன்னர் என்பது இனத்தால் அறிக!
கயலிகல் உண் கண்ணாய்! கரியரோ வேண்டா;
அயலறியா அட்டூணோ இல். (பாடல்-237)
கயல் மீன்களையும் தம் நீட்சியால் மாறுபாடு கொள்ளச் செய்யும் மை தீட்டிய கண்களை உடையவளே! பக்கத்து வீட்டார் அறியாதவாறு சமைத்து உண்பதென்பது ஒருபோதும் இயலாது. அதனால், ஒருவருடைய தன்மையை அறிய பெரிய முயற்சிகள் எதுவுமே தேவையில்லை. காட்டில் வாழும் முனிவர்களே என்றாலும், அவர்கள் நல்ல இயல்பினர்களா அல்லது தீய இயல்பினர்களா என்பதை அவருடன் சேர்ந்திருப்பவர்களைக் கொண்டே அறிந்து கொள்ளலாம். அவரியல்பை மெய்ப்பிக்க வேறு சாட்சிகள் எதுவுமே வேண்டாம்.
"அயலறியா அட்டூணா இல்' என்பது பழமொழி.