நினைத்த இதுவென்றந் நீர்மையே நோக்கி
மனத்தது அறிந்தீவார் மாண்டார்-புனத்த
குடிஞை இரட்டும் குளிர்வரை நாட!
கடிஞையில் கல்லிடுவார் இல். (பாடல்-126)
புனத்து இடங்களிலே, கோட்டான் கூப்பிட்டுக் கொண்டிருக்கும் குளிர்ந்த மலைகளை உடைய நாடனே! ஒருவன் பிச்சை எடுத்து உண்ணும் ஓட்டிலே போய்க் கல்லைக் போடுபவர்கள் உலகில் எவரும் இல்லை; ஆனால், அறிவினாலே மாட்சிமை உடைய சான்றோர்களோ, தம்மிடத்தே இரந்து வருபவர் "தம் உள்ளத்திலே எண்ணியது இது' என்று அவருடைய தன்மை யையே ஆராய்ந்து பார்த்து, அவர் மனத்திலுள்ளதை அறிந்து, அதற்கேற்பக் கொடுத்து உதவுபவராகவே இருப்பார்கள். "கடிஞையில் கல்லிடுவார் இல்' என்பது பழமொழி.