வன்சார்பு உடையர் எனினும் வலிபெய்து
தஞ்சார்பு இலாதாரைத் தேசூன்றல் ஆகுமோ
மஞ்சுசூழ் சோலை மலைநாட! யார்க்கானும்
அஞ்சவார்க் கில்லை அரண். (பாடல்- 254)
வலிமை உடையவர்களின் துணையுடையவர்கள் என்றாலும், தம் அளவிலே வலிமையில்லாதவருக்கு வலிமையைப் பெய்து, அவரைப் புகழிலே நிலைபெறுத்துதல் எவராலும் ஆகுமோ? ஆகவே ஆகாது. வெண் மேகங்கள் தங்கும் சோலைகளை உடைய மலைநாடனே! எப்படிப்பட்ட துணைகளை உடையவர்களானாலும், உள்ளத்திலே அஞ்சி நடுங்கும் கோழைகளாக இருப்பவர்களுக்குப் பாதுகாக்கும் அரண் என்பது எதுவுமே கிடையாது என்று அறிவாயாக. "அஞ்சுவார்க்கு இல்லை அரண்' என்பது பழமொழி.