பாபாவிற்கு கோயில் எழுப்ப வேண்டும் என்ற லட்சியத்தை நிறைவேற்றுவது சாதாரணமான ஒன்றல்ல. தனது பிறந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியார்பட்டியில் சுமார் ஐயாயிரம் சதுரஅடியில் "குபேர சாயிபாபா'
கோயிலைக் கட்டி சாதித்திருக்கிறார் தோத்தாத்ரி!
கடந்த ஜூன் மாதம் இக்கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
பாபா கோயிலைக் கட்ட ஆரம்பித்த நாளிலிருந்தே வேலைகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது. தன்னால் முடிந்த அளவு பக்தர்களின் உதவியுடனும் ஊர்ப் பொதுமக்கள் ஆதரவுடனும் கோயிலை கட்டியுள்ளார். அவரது குடும்பத்தாரும் அவருக்கு எல்லாவிதத்திலும் உறுதுணையாக இருந்துள்ளனர். அவர் யாரிடமும் போய் யாசகம் கேட்கவில்லை. கடன்வாங்கியும் விருப்பப்பட்ட பக்தர்கள் அளித்த நன்கொடைகளை பெற்றும் கோயிலை உருவாக்கியதாகக் கூறுகிறார்.
விசாலமாக கட்டப்பட்டுள்ள இக்கோயிலின் மேல் தளத்தில் பிரார்த்தனை கூடமும் கீழே தரைத்தளத்தில் பெரிய அன்னதானக்கூடமும் மையத்தில் பாபாவின் திருவுருவமும் நிறுவப்பட்டுள்ளன. மேலும், இந்த ஆலயத்தில் பாண்டுரங்கர், கணபதி, விநாயகர், தத்தாத்ரேயர் போன்ற தெய்வ மூர்த்தங்களும் அமைந்துள்ளன. அதோடு, ராகு, கேது தோஷம் உள்ளவர்களுக்காக பரிகாரத் தலமும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
""மனிதப்பிறவி எடுத்திருப்பது சுகபோகங்களை அனுபவிப்பதற்காக மட்டுமல்ல, பிறரது நன்மைக்காகப் பாடுபடுவதற்காகவும் என்ற புரிதல் வேண்டும். அதற்காகவே நிர்மாணிக்கப்பட்டதே இந்த பாபா ஆலயம். இன்னும் மேல்தளத்தில் பல்வேறு கட்டுமானப் பணிகள் நடைபெற வேண்டி உள்ளது. நிறைய பணத்தேவையும் உள்ளது. பாபாவின் கருணை அதையும் செய்து கொடுக்கும்''என்கிறார் பெரியவர் தோத்தாத்ரி.
இவ்வாலயம், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் ரெட்டியார்பட்டி உயர்நிலைப்பள்ளிக்கு எதிர்புறத்தில் அமைந்துள்ளது.