விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டத்தில் உள்ளது அகரம் என்கின்ற குலதீபமங்கலம். இவ்வூரில் பழைமையான அய்யனார் சுவாமி ஆலயம், துர்கைமேடு காளியம்மன் ஆலயம், அரசமரத்து சித்தி விநாயகர் கோயில், திரௌபதி அம்மன் கோயில், மாரியம்மன் கோயில், ஸ்ரீ வீரராகவப் பெருமாள் ஆலயம், ஸ்ரீ கைலாசநாதர் கோயில் என கோயில்கள் நிறைந்த ஊராக விளங்கி வருகின்றது.
பல மகான்கள் இந்த புண்ணிய பூமியில் தங்கள் பாதம் பதித்துள்ளனர். அருளாளர் திருக்கோவிலூர் ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகளின் அபிமானத்திற்கு உரிய தலமாகும். ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஊர் மக்கள் எங்கு வசித்தாலும் இவ்விடத்திற்கு குடும்பத்துடன் வந்திருந்து அனைத்து ஆலயங்களிலும் உற்சவங்களை நடத்தி வருகின்றனர். இவ்வாண்டு, ஆகஸ்ட் 2, 3, 4 தேதிகளில் பல விழாக்களை அகரம் குலதீபமங்கலம் பக்த சமாஜம் என்ற அமைப்பு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றது.
முக்கியமான விழாவாக, ஆகஸ்ட் 3-ஆம் தேதி பாகவத பத்ததியில் கடலூர் கோபிபாகவதர் குழுவினரின் ராதா கல்யாண நிகழ்ச்சியும், திருக்கோவிலூர் ஸ்ரீ எம்பெருமான் ஜீயர் ஸ்வாமிகள் முன்னிலையில் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் உற்சவர் திருமஞ்சனமும், திருக்கல்யாணமும் நடைபெறுகின்றது. ஆகஸ்ட் 4 -ஆம் தேதி சிவன் கோயிலில் மஹன்யாச ஏகாதச ருத்ரஜப ஹோமத்துடன் விழா முடிவடைகின்றது. விழா நாள்களில் கருடவாகனத்தில் ஸ்ரீ வீரராகவப் பெருமாளும், ரிஷப வாகனத்தில் ஸ்ரீ கைலாச நாதரும் ஒன்றாக வீதி உலா வருவதைக் காண கண் கோடி வேண்டும்.
தொடர்புக்கு: 94440 12905 / 98403 24230.
- எஸ். வெங்கட்ராமன்