பொன்மொழிகள்!

அவலட்சணத்தின் மீது மனதைச்..
பொன்மொழிகள்!

அவலட்சணத்தின் மீது மனதைச் செலுத்து; காமம் மடிந்துபோகும். எவன் குற்றமற்ற மேதையோ அவனே உண்மையான அழகுள்ளவன். அறநெறிப்போதனைகளைக் கேட்டறிந்த அறிஞர்கள், ஆழமும் தெளிவும் அமைதியும் நிறைந்த குளத்தைப்போல் சாந்திநிலை பெறுகிறார்கள்.     

- புத்தர்

காகங்கள் சுவையற்ற பழங்களைச் சுவைக்கின்றன. குயில் இனிமையான மாங்கனியைச் சுவைக்கிறது. அதுபோல நாத்திகர்கள் பயனற்ற பகுத்தறிவு ஆராய்ச்சி நடத்துகிறார்கள். ஆத்திகர்களோ இனிமையான கடவுளின் நாமத்தைச் சுவைக்கின்றனர்.

- ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் 

பரமாத்மா பஞ்சபூதங்களிலும் எழுந்தருளியிருக்கிறார். அவர் எல்லாப் பிராணிகளின் அகத்திலும் வியாபித்திருக்கிறார். எல்லாப் பஞ்சபூதங்களும் ஆத்மாவில் இருக்க, ஆத்மா எல்லாப் பஞ்சபூதங்களிலும் இருந்து வருகிறது.

- யஜுர்வேதம்

ஏ மனிதர்களே, உடலில் உயிரை ஓடச் செய்யும் தேவன் யார்? எவன் பலம் அளிக்கிறானோ, எவன் எல்லா உயிர்களின் மீதும் ஆட்சி செய்கிறானோ, எல்லாத் தெய்வங்களும் எவனை அண்டி இருக்கின்றனவோ, எவனது நிழலைத் தீண்டிய மாத்திரத்தில் முக்தி கிடைத்துவிடுகிறதோ, எவனை அறிந்துகொள்ளாததால் இங்கே வருவதும் பிறகு போவதும், மீண்டும் வருவதுமாய் இருக்க நேருகிறதோ  அந்தப் பரமாத்மாவிடம் நாம் அன்போடு பக்தி செலுத்துபவர்களாக இருக்க வேண்டும்.

- ரிக்வேதம்

எவனுடைய உள்ளம் தர்மத்திலேயே எப்பொழுதும் ஈடுபடுகிறதோ, அவனைத் தேவர்களும் வணங்குகிறார்கள்.

- சமண மதம் 

லட்சுமணா, நான் அதர்மத்திற்குப் பயப்படுபவன்; தப்புக் காரியங்களைச் செய்ய விரும்பாதவன். அயோத்தியில் முடிசூட்டிக்கொள்வது எனக்கு மிகவும் சுலபமானதுதான். என்றாலும் அதர்ம மார்க்கத்தில் அரசைப் பெற எனக்கு விருப்பமில்லை. அயோத்தி என்ன? தேவலோகத்திலிருந்து இந்திர பதவியை அடைந்து அரசு பெறவும் எனக்குச் சக்தியுண்டு. என் கோதண்டமும் பலமும் எங்கே சென்றன? அநீதி மார்க்கத்தில் இருந்து பணம் சம்பாதிக்கக் கூடாது என்பதால்தான் சும்மா இருக்கிறேன். தர்மத்தைக் கடைப்பிடித்து நாம் காப்பாற்றினால் அது நம்மை காப்பாற்றும்.''

- ஸ்ரீ ராமபிரான் காட்டுக்குச் சென்றபோது கூறியது

"நாம் மட்டும் வருந்தவில்லை; எல்லாப் பிராணிகளுமே வருந்துகின்றன' என்று நினைத்து, தங்களுக்கு வரும் துன்பங்களை அறிஞர்கள் பொறுத்துக்கொள்வார்கள். பிறர் இகழ்ந்தாலும் அறிஞர்கள் கோபம் கொள்ளமாட்டார்கள்; பொறுத்துக்கொள்வார்கள்; சண்டையிடமாட்டார்கள்.

- மகாவீரர் 

உலகத்தில் உள்ள அனைத்திலும் தர்மமே பெரியது. தர்மத்தின்மீதுதான் சத்தியம் நிலைத்திருக்கிறது.

- வால்மீகி ராமாயணம்

-  சுவாமி கமலாத்மானந்தர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com