கல்யாண வரமருளும் கணபதி!

தெய்வ சக்தி வடிவங்களில் கணபதிக்கு முதலிடமளிக்கிறோம். கணபதி "ஓம்' வடிவம் பாரத தேசத்தில் உள்ள ஊர்கள் அனைத்திலும் ஸ்ரீ விநாயகப்பெருமான் வீற்றிருந்து அருள்புரிகின்றார்.
கல்யாண வரமருளும் கணபதி!

தெய்வ சக்தி வடிவங்களில் கணபதிக்கு முதலிடமளிக்கிறோம். கணபதி "ஓம்' வடிவம் பாரத தேசத்தில் உள்ள ஊர்கள் அனைத்திலும் ஸ்ரீ விநாயகப்பெருமான் வீற்றிருந்து அருள்புரிகின்றார். இத்திருக்கோயில்களில் பெரும்பாலும் தனியாகவே எழுந்தருளி இருக்கின்றார். ஒரு சில ஆலயங்களில் மட்டுமே கருவறையில் தனது சக்திகளுடன் அமர்ந்து அருள்பாலிக்கின்றார். இவரை மாப்பிள்ளை விநாயகர், கல்யாண விநாயகர் என்றும் அழைக்கின்றனர்.
 பக்தர்களுக்கு அருள்புரியும் பொருட்டு ஆதியில் ஸ்ரீ விநாயகர் தம்மிடமிருந்து இச்சாசக்தியையும், கிரியா சக்தியையும் இருபெரும் தேவியாகத் தோன்றும்படி செய்து அந்த இருவருடன் அவர் ஞானமூர்த்தியாக எழுந்தருளுவதாக ஐதீகம். சித்தி, புத்தி, என அழைக்கப்படும் அவ்விருவருமே ஸ்ரீ விநாயகரின் சக்தி அம்சங்கள் ஆவார்.
 சோழவளநாட்டின் நெற்களஞ்சியமாம் தஞ்சை தரணியில் காவிரியின் வடபால் அமைந்துள்ளது ஸ்ரீ உன்னதபுரம் என்கின்ற ப்ராசீன நாமதேயத்தோடு விளங்கக்கூடிய அழகிய கிராமமாகிய மெலட்டூர். பாகவதமேள நாட்டிய நாடகங்களுக்கு பெயர் பெற்ற ஊர். இக்கிராமத்தில் உள்ள ஸ்ரீ சித்தி புத்தி சமேத அருள்மிகு தட்சிணாமூர்த்தி விநாயகர் ஆலயம் மிகவும் பழைமையானது. ஞான புராணத்தில் ஸ்ரீ கர்க மஹரிஷியால் வர்ணிக்கப்பட்டிருக்கின்ற 108 கணபதி ஸ்தலங்களுடள் 81 -ஆவது ஸ்தலமாக இது கருதப்படுகிறது.
 கருவறையில் மூலமூர்த்தியாக தனித்திருந்து அருளும் இந்த மகாகணபதி உற்சவ மூர்த்தியாக சித்தி, புத்தி தேவியர்களுடன் அருளுவது சிறப்பு. உற்சவாதி தினங்கள் மற்றும் வீதியுலாக்களிலும் அவ்வாறே காட்சி தந்து வேண்டுவோருக்கு வேண்டுவன அருள்பாலித்து "விவாஹவரமருளும் விநாயகர்" என விசேஷ நாமதேயத்தோடு விளங்குகின்றார். வேறு எந்த தலத்திலும் இல்லாத ஒரு சிறப்பு இந்த பிரத்யேக விநாயகர் ஆலயத்தில் சண்டிகேஸ்வரர் சந்நிதியும் அமைந்துள்ளதாகும். இங்கு விநாயகர் கல்யாண உத்சவத்தில் கலந்து கொண்டவர்கள் குடும்பத்தில் வெகுவிரைவில் மங்கலகரமான திருமணங்கள் நிகழ்கின்றது என்பது கண்கூடு.
 இவ்வாலயத்தில் மெலட்டூர் ஸ்ரீ கணநாதா டிரஸ்ட் என்ற அமைப்பின் மூலம் பல்வேறு திருப்பணி வேலைகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவேறியுள்ளன. ஜூன் 20 -ஆம் தேதி காலை 10 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கரவிஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள் முன்னிலையில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகின்றது.
 அன்று மாலை ஸ்ரீ விநாயகருக்கு திருக்கல்யாண உத்சவம் நடத்தப்படுகிறது. பூர்வாங்க பூஜை, ஹோமங்கள் ஜூன் 15- ஆம் தேதி ஆரம்பமாகிறது.
 தொடர்புக்கு: 99943 67113 / 98440 96444.
 - எஸ்.வெங்கட்ராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com