ராமருக்கு அருளிய பொய்சொல்லா மெய்யர்!

நெல்லை மாவட்டம் களக்காட்டில் உள்ள சத்யவாஹீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்திபெற்றது. இக்கோயிலின் ராஜகோபுரம் 156 அடி கொண்டது.
ராமருக்கு அருளிய பொய்சொல்லா மெய்யர்!

நெல்லை மாவட்டம் களக்காட்டில் உள்ள சத்யவாஹீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்திபெற்றது. இக்கோயிலின் ராஜகோபுரம் 156 அடி கொண்டது. காண்போர் விழிகளை ஆச்சரியத்தின் விளிம்பிற்கு கொண்டு செல்லும் இக்கோபுரம் 9 அடுக்குகளைக் கொண்டது. இதன் உச்சியில் 9 கலசங்களும், பெரிய யாழிகளும் உள்ளன. ஆகம விதிப்படி அமைக்கப்பட்டுள்ளது.
 ராஜகம்பீரத்துடன் காட்சியளிக்கும் இக்கோபுரத்தின் உட்பகுதியில், புராண இதிகாச கதைகளை விளக்கும் ஓவியங்கள், இறைவனின் திருவிளையாடல் ஓவியங்கள் பல்வேறு வண்ணங்களில் வரையப்பட்டுள்ளன. இந்த பழங்கால ஓவியங்கள், எக் காலத்தாலும் அழியாத கலர் பூச்சுக்களால் வரையப்பட்டுள்ளது சிறப்பாகும்.
 கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் களக்காட்டை தலைநகரமாகக் கொண்டு நல்லாட்சி நடத்தி வந்த வீரமார்த்தாண்ட சேரர் என்ற மன்னன், காண்போர் வியக்கும் வண்ணம் இக்கோயிலை கம்பீரத்துடன் கட்டியுள்ளார். இக்கோயில் கட்டிய காலத்தில் தான், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயமும் கட்டப்பட்டதாக சில தகவல்கள் சொல்கின்றன.
 வீரமார்த்தாண்ட சேர மன்னர், திருப்புடைமருதூர் என்ற தலத்திலும் ஒரு கோயில் அமைத்து, குறிப்பிட்ட சில தினங்கள் மட்டும் களக்காடு அரண்மனையில் இருந்து, குதிரையில் திருப்புடை மருதூர் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டுத் திரும்புவாராம். இப்படி ஒரு நாள் செல்லும்பொழுது, களக்காட்டில் ஓடும் (இப்போதும் இந்த ஆறு இங்கே பாய்கிறது) பச்சையாற்றில் அளவிற்கு அதிகமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால், ஆற்றைக் கடந்து, திருப்புடைமருதூருக்கு சாமி தரிசனத்திற்கு செல்ல முடியவில்லை. "இன்று சாமி தரிசனம் செய்ய முடியாமல் போய்விட்டதே...' என்று மன்னர் வருந்தினார் மன்னர் .
 அப்போது, "கவலைப்படாதே! இங்குள்ள (களக்காடு) புன்னை மரத்தடியில் நாம் இருக்கிறோம். அங்கு எமக்கு ஒரு கோயில் அமைத்து வழிபடலாம்' என்று அசிரீரி கேட்டதாகவும் அதன்பிறகே அந்த லிங்கத்தைக் கண்டுபிடித்து அங்கே ஒரு கோயிலைக் கட்டினார் மன்னர் வீரமார்த்தாண்ட சேரர் என்கின்றனர். அதுவே, இந்த களக்காடு ஸ்ரீசத்யவாஹீஸ்வரர் திருக்கோயில். இங்கு, இறைவன் சத்யவாஹீஸ்வரராகவும், அம்பாள் கோமதி அம்மையாகவும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.
 இங்குள்ள புன்னை மரத்தடியில் எழுந்தருளியிருந்த லிங்கம் தனிப்பெருமை வாய்ந்தது. ஸ்ரீராமர், சீதையைத் தேடி அலைந்தபோது களக்காடு வந்து இந்த லிங்கத்தை வழிபட்டதாக ஐதீகம்! அப்போது " சீதை கிடைப்பாள்' என்று சத்யவாக்கு கிடைத்தது. அதன்படி சீதையை மீட்ட ராமர், மீண்டும் சீதையுடன் வந்து, இத்தல லிங்கத்திற்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தினார் என்பர். ராமருக்கு சத்யவாக்கு கொடுத்ததால், இவ்வூர் இறைவன் சத்யாவாஹீஸ்வரர் என்ற திருநாமம் பெற்றதோடு, "பொய் சொல்லா மெய்யர்' என்ற பெயரும் பெற்றார் என்று தலவரலாறு தெரிவிக்கிறது!
 கோயிலுக்குள் நுழைந்தவுடன் நம்மை வரவேற்பது ராஜகோபுரம்தான். அதனையடுத்து இடதுபக்கம் ஒரு பொற்றாமரைக் குளமும், வலது பக்கம் மீனாட்சி சொக்கநாதர் சந்நிதிகளும் உள்ளன. 631 அடி நீளமும், 293 அடி அகலமும் கொண்டதாகத் திகழும் இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரம் தவிர மேலும் 4 கோபுரங்களும் இங்கு உள்ளன.
 இக்கோயிலில் இறைவன் இறைவி சந்நிதிகளுடன் விநாயகர், ஸ்ரீநவநீத கிருஷ்ணர், ஐயப்பன், துர்க்கையம்மன், ஜூரதேவர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், கஜலட்சுமி, சந்தன நடராஜர், அன்னலட்சுமி, சூரியன், சந்திரன், அதிசய சித்ரகுப்தர் ஆகிய தெய்வங்களுக்கும் தனி சந்நிதிகள் அமைந்துள்ளன.
 தமிழகத்தில் விரல்விட்டு சொல்லக்கூடிய சில முக்கியமான கோயில்களில் மட்டுமே 63 நாயன்மார்களுக்கும் தனி சந்நிதி அமைக்கப்பட்டிருக்கும். இந்த களக்காட்டு கோயிலிலும் 63 நாயன்மார்களுக்கும் தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 நாகர்கோவில் பாபாநாசம் செல்லும் பாதையில் களக்காடு அமைந்துள்ளது. திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் இருந்து இங்கு செல்ல பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நான்குநேரியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் களக்காடு அமைந்துள்ளது.

 - களக்காடு வ. மாரிசுப்ரமணியம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com