புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 29

புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 29

இயேசுவால் சபிக்கப்பட்ட பட்டணங்கள்:
 இயேசு கிறிஸ்து தன்னுடைய ஊழிய நாட்களில் அதிக நேரம் செலவிட்டது கலிலேயா கடக்கரையை சுற்றிலும் தான். கலிலேயா கடலையும் அதை சுற்றி இருந்த பட்டணங்களிலும் அதிக நாள்கள் ஊழியம் செய்ததாக விவிலியம் கூறுகிறது.
 இதில் கோராசின், பெத்சாயிதா மற்றும் கப்பர்நகூம் ஆகிய பட்டணத்தார் மனம் திரும்பாமல் தங்கள் இருதயத்தை கடினப்படித்தின நிமித்தம் இயேசு கிறிஸ்து அவர்களை கடிந்து கொண்டார்.
 மத்தேயு 11: 21-இன்படி "கோராசினே! உனக்கு ஐயோ, பெத்சாயிதாவே! உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பார்கள்'. அதேபோல, மத்தேயு 11: 23- இன்படி, "வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாள பரியந்தம் தாழ்த்தப்
 படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்நாள் வரைக்கும் நிலைத்திருக்கும்'.
 இயேசு கிறிஸ்து கடிந்து கொண்ட பட்டணங்கள் இன்று வெறும் கற்குவியல்களாக கிடக்கின்றன. அங்கு ஒருவர் கூட வசிக்கவில்லை. ஆனால் அங்கு இருந்த திபேரியா என்ற பட்டணத்தை இயேசு கிறிஸ்து ஒன்றும் சொல்லவில்லை. அந்த பட்டணம் இன்று செழிப்பாக உள்ளது.
 கப்பர்நகூம்:
 விவிலியத்தின்படி, இயேசுகிறிஸ்து பெத்லஹேமில் பிறந்தார். நாசரேத் -இல் வளர்ந்தார். எனினும் நாசரேத் ஊரில் அவரது ஊழியத்தை தொடங்கியபோது மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு தீர்க்கதரிசிக்குத் தன் சொந்த ஊரிலே மதிப்பு இல்லை என்று இயேசு தாமே சொல்லியிருந்தார். ஆனாலும் கப்பர்நகூம் அவரது பணிக்கு ஒரு மத்திய பகுதியாக அமைந்தது. அதோடு இந்த பட்டணத்தில் மக்கள் தொகையும் அதிகமாக காணப்பட்டது.
 பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து மீண்டு வந்த யூதர்களால் கப்பர்நகூம் உருவாக்கப்பட்டது. மீன்பிடி மையமாகவும் இப்பகுதி காணப்பட்டது. கலாசார முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவும் கப்பர்நகூம் இருந்தது. வேதாகம காலப்பகுதியில் ரோம வரி வசூலிக்கும் மையமாகவும் இது காணப்பட்டது. மலைப்பிரசங்க இடத்தில் இருந்து அரை கி.மீ. தூரத்தில் தான் கப்பர்நகூம் உள்ளது. கப்பர் என்றால் எபிரேய மொழியில் கிராமம் என்று அர்த்தம், நகூம் என்பது ஒருவரின் பெயர்.
 இயேசு கிறிஸ்து கப்பர்நகூமில் அநேக அற்புதங்களை செய்தார் என்று விவிலியம் கூறுகிறது. நூற்றுக்கு அதிபதியின் வேலைக்காரன் சொஸ்தமானது, திமிர்வாதக்காரன் குணமாகுதல் ஆகிய அற்புதங்கள் இங்கு தான் நடைபெற்றன. இப்பகுதியில் தான் கலிலேயா கடலிலே மீன்பிடிக்கும் சீமோன், யாக்கோபு, யோவான், அந்திரேயா போன்றவர்களை தன்னை பின்பற்றும்படி இயேசு கேட்டுக்கொண்டதோடு, அவர்களை சீடருமாய் மாற்றினார். வரிவசூலிக்கும் மத்தேயுவும் கப்பர்நகூமில்தான் இயேசுவை ஏற்றுக்கொண்டு அவரை பின்தொடர்ந்தார். இவ்வாறான பல காரணங்களால் கப்பர்நகூம் ஒரு முக்கிய இடமாக வேதாகமத்தில் குறிப்பிடப்படுகிறது.
 ஆனாலும் இயேசுவின் போதனைகளை இம் மக்கள் ஏற்றுக்கொள்ளாததால் சாபத்திற்கும் உள்ளாகிறது. இந்த இடம் இப்போது அழிந்து போன நிலையில் காணப்படுகிறது. பழங்கால கட்டடங்கள் சிதிலடைந்து காணப்படுகின்றன. இங்கு இயேசுவின் சீடரான பேதுருவின் மாமியார் வீட்டை காணலாம். திமிர்வாதகாரனை கூரையை பிய்த்துக்கொண்டு வீட்டுக்குள் இறக்கிய இடமும் இது தான். இங்கு ஒரு சிற்றாலயம் (சினாகாக்) கட்டப்பட்டுள்ளது. இயேசு தனது 33 வயது வரை இந்த கிராமத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
 தான் வாழ்ந்த நாசரேத்தில் இருந்து கப்பர்நகூமுக்கு வர அர்பேல் பள்ளதாக்கு வழியை பயன்படுத்தினார். இந்த வழியில் தான் மகதேன் நகரம் உள்ளது. இங்கு விவிலியத்தில் கூறப்பட்டுள்ள மகதேனில் மரியாளின் வீடு உள்ளது.
 - ஜெபலின் ஜான்
 (தொடரும்...)
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com