பித்ருதோஷங்கள் போக்கும் சங்கமேஸ்வரர்!

அமிர்தத்தை எடுக்க, தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்தனர். கிடைத்த அமிர்தத்தில் தேவர்களுக்கு அளித்ததுபோக மீதம் இருந்தது. அதை தவ முனிவர்களுக்கு வழங்க வேண்டும் என்று
பித்ருதோஷங்கள் போக்கும் சங்கமேஸ்வரர்!

அமிர்தத்தை எடுக்க, தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்தனர். கிடைத்த அமிர்தத்தில் தேவர்களுக்கு அளித்ததுபோக மீதம் இருந்தது. அதை தவ முனிவர்களுக்கு வழங்க வேண்டும் என்று பெருமாள் விரும்பினார். இதையடுத்து கருடனிடம் அமுத கலசத்தைக் கொடுத்து, பராசர முனிவரிடம் ஒப்படைக்கச் சொன்னார்.
 முனிவர் அமுத கலசத்தை பாதுகாப்பாக ஓர் இடத்தில் மறைத்து வைத்தார். லவணாசூரனின் நான்கு புதல்வர்களும் கலசத்தைத் தேடி அங்கும் வந்த நிலையில், பராசர முனிவர் வேதநாயகியிடம் முறையிட்டார். அன்னையிடம் இருந்து நான்கு சக்திகள் கிளம்பி, அசுரர்களை அழித்தது. இதையடுத்து பராசர முனிவர் அமுத குடத்தை எடுத்தபோது, அதில் லிங்கம் இருந்தது. ஈசன் அங்கு ஓர் அமுத தீர்த்தத்தை உருவாக்க அது பவானி, காவிரியுடன் கலந்து முக்கூடலாக மாறியதாக ஐதீகம்!
 இத்தல இறைவனின் திருப்பெயர் "சங்கமேஸ்வரர்', அம்பிகை "வேதநாயகி' ஆவர். காவிரி, பவானி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி ஆகிய மூன்று நதிகளும் கூடும் இடமானதால் இவ்விடம் "கூடுதுறை' என்றும் சொல்லப்படுகிறது. அம்மன், நதி, தலம் மூன்றிற்கும் பவானி என்றே பெயர். இத்தலம் வந்து நீராடி, இறைவனை தரிசிப்பவர்களுக்கு "யாதொரு தீங்கும் நெருங்காது என்பர். இத்தலத்திற்கு "திருநணா' என்ற புராணப்பெயரும் உண்டு.
 மூன்று நதிகளும் கூடும் இடத்திற்கு வட கரையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கோயிலின் ராஜகோபுரம் வடக்கு திசையில் 5 நிலைகளையும், 7 கலசங்களையும் உடையதாக அமைந்துள்ளது. கோயிலில் சங்கமேஸ்வரர், வேதநாயகி சந்நிதிகள் மட்டுமல்லாமல் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் சவுந்திரவல்லி தாயார் ஆகியோருக்கும் சந்நிதிகள் அமைந்து சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்கட்டாக உள்ளது.
 பூலோகத்தில் உள்ள புனிதத் தலங்களைத் தரிசிக்க விரும்பிய குபேரன், இந்தத் தலத்துக்கு வந்தபோது ஞானிகள், முனிவர்கள், கந்தர்வர்கள் அனைவரும் தவம் செய்வதைக் கண்டான். மேலும், மான், பசு, புலி, யானை, சிங்கம், நாகம், எலி உள்ளிட்ட உயிரினங்களும் சண்டையின்றி, ஒன்றாக நீர் அருந்துவதுடன், தவம் செய்பவர்களுக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்பதையும் பார்த்து ஆச்சரியமடைந்தான். அங்கு குபேரன் செய்த தவத்தில் மகிழ்ந்த, ஹரியும் சிவனும் அவனது விருப்பப்படி இந்தத் தலம் "தட்சிண அளகை' என்று அழைக்கப்படும் என அருள்செய்தனர்.
 நான்கு வேதங்களும் இங்கு தீர்த்தங்களாக உள்ளதால் இங்கு வேண்டிக்கொண்டால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை. கோபுரமே லிங்கமாக வழிபடப்படுவதால், கோபுரத்திற்கு வெளியே நந்தி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் மாசி மகம், ரத சப்தமிக்கு மூன்றாம் நாளன்று சூரிய ஒளி சங்கமேஸ்வரர், வேதநாயகி, சுப்ரமணியர் மீது பட்டு, சூரிய பூஜை நடப்பது சிறப்பானது.
 அம்பிகை வேதநாயகி சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அதற்கு வலப்பக்கம் சுப்பிரமணியர் சந்நிதி இருக்கிறது. சுப்பிரமணியர் சந்நிதியைக் கடந்து அமைந்துள்ள மூலவர் சங்கமேஸ்வரர் சுயம்பு லிங்கமாக அருள்கிறார். இத்தலத்தில் வீற்றுள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார்.
 அருகிலேயே ஜுரஹரேஸ்வரர் உருவம் மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று தலைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. அடியார்கள் தங்களைப் பீடித்த சுரநோய் நீங்க, ஜுரஹரேஸ்வரரை வழிபட நோய் நீங்கப் பெறுவர். இங்கு 63 நாயன்மார்களின் திருமேனிகள் உள்ளன.
 வட இந்தியாவில் உள்ள அலகாபாத்தில் கங்கையுடன் யமுனை, சரஸ்வதி நதி இரண்டும் சங்கமிக்கும் தலம் "திரிவேணி சங்கமம்' எனப்படுகிறது. அங்கு சரஸ்வதி நதி கண்ணுக்குத் தெரிவதில்லை. அதுபோல், தமிழகத்தில் பவானி, காவிரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என மூன்று நதிகளும் கூடும் இடம் "தென் திரிவேணி சங்கமம்' என்று அழைக்கப்படுகிறது.
 பவானி கூடுதுறை, பாவம் போக்கி புண்ணியம் அளிக்கும் சக்தி மிக்க தலமாகத் திகழ்வதால், ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் இங்கு நீராடி, பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்வது மிகுந்த புண்ணியம் தரும். அதனால், பித்ரு தோஷங்கள் நீங்கும் என்பதாகவும் ஐதீகம். இவ்வாலயத்தில் அமைந்துள்ள சனீஸ்வரபகவான் மிகவும் சக்தி வாய்ந்தவர். இக்கோயிலின் தல விருட்சம் இலந்தை மரம்.
 இங்குள்ள அமுதலிங்கத்தின் பாணப் பகுதியை எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டு ஆவுடையாரை வலம் வர, குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு ஏற்படும் என்பதும் மக்களின் நம்பிக்கையாகும்.
 1804-ஆம் ஆண்டில் கோயம்புத்தூர் கலெக்டராக (ஈரோடு மாவட்டம் பிரிக்கப்படாத காலம்) இருந்தவர், வில்லியம் காரோ. 1804-ஆம் வருடம் ஜனவரி 11-ஆம் நாளன்று கடுமையான மழையுடன், இடியும் மின்னலுமாய் இருந்தது. அந்த இரவு நேரத்தில், கோயில் வளாகத்துக்கு வெளியே குடியிருப்பு வளாகத்தில் உள்ள அறையில் கலெக்டர் வில்லியம் காரோ உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவரது அறைக்கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. உடனே வெளியே வந்த கலெக்டரை, ஒரு சிறிய பெண், "உடனே வெளியில் வாருங்கள்.. ஆபத்து..' என கூறி அழைத்தாள்.
 அதிர்ச்சியுடன் அவளைப்பின் தொடர்ந்து கோயில் வரை சென்ற கலெக்டர், அந்தப் பெண் வேதநாயகி சந்நிதிக்குள் சென்று மறைந்து விட்டதை கண்டு வியப்போடு நின்று விட்டார். அதே நேரத்தில் அவர் குடியிருந்த பங்களா இடிந்து விழுந்தது கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தார்.
 தன்னுடைய உயிரைக் காப்பாற்றியதற்காக, அம்பிகை வேதநாயகிக்கு காணிக்கையாக தந்தத்தில் கட்டில் ஒன்று செய்து அவரது கையொப்பமிட்டு ஆலயத்திற்கு அன்பளிப்பாக வழங்கினார். இந்த தந்தக் கட்டில் இன்றும் இந்த உண்மையை பறைசாற்றியபடி அங்கே இருக்கிறது.
 இக்கோயில் சேலத்தில் இருந்து 56 கி.மீ. தொலைவிலும், ஈரோட்டில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
 - அறந்தாங்கி சங்கர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com