60 தமிழ் ஆண்டுகளில் தற்சமயம் 34-ஆவது வரிசையில் பிறப்பது சார்வரி ஆண்டாகும். இந்த சார்வரி தமிழ் புத்தாண்டு, விகாரி ஆண்டு, பங்குனி மாதம் 31 -ஆம் தேதி, (13.04.2020) திங்கள்கிழமை, இரவு 8.00 மணி, 25 நிமிடங்கள், 20 நொடிகள் அளவில் துலாம் லக்னத்தில் மிதுன நவாம்சத்தில் பூராடம் நட்சத்திரம், ஒன்றாம் பாதத்தில் கிருஷ்ணபட்சம் (தேய்பிறை), சப்தமி திதி, சந்திரபகவானின் ஹோரையில், சூரியபகவான் சித்திரை மாதத்தில் அடியெடுத்து வைத்து பிறக்கிறது.
லக்னம் என்பது உயர்ந்த ஸ்தானமாக கருதப்படுவதால், அது குருபகவானின் சாரத்தில் (விசாக நட்சத்திரம்) அமைவது, இந்த சார்வரி ஆண்டு குருபகவானின் அருளால் ஜீவ ஓட்டமாக அமையும். லக்னம் மற்றும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் சந்திரபகவானின் சாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் இருக்கும் நிலை) அமர்ந்திருக்கிறார்.
சுக்கிரபகவான் களத்திரகாரகராவார். கணவனுக்கு மனைவியையும், மனைவிக்கு கணவரையும் குறிப்பவர். கம்பீரத் தோற்றம், கலைத்துறை, வண்டி வாகனம், வீடு, பிராணிகள், குபேரசம்பத்து என்பார்களே அதற்கும் சுக்கிரபகவானே காரணமாகிறார். அனைவருடனும் நேசமாகப் பழகும் குணம் உண்டாகும். பெண்களின் முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவும் கிரகமாவார். நவரத்தினங்களில் விலை மதிப்பான வைரம் சுக்கிரபகவானுககு உகந்ததாகும். வெள்ளி என்றழைக்கப்படுகிற சுக்கிரபகவான் நமது பூமியின் பருமனைப்போல் இருப்பதால் பூமியின் இரட்டை என்று வானியல் நிபுணர்கள் கூறுவார்கள். சுக்கிரபகவானுடைய குறுக்களவு 7700 மைல் என்றால், பூமியின் குறுக்களவு 7926 மைல்களாகும். சுக்கிரபகவானும் சந்திரபகவானைப் போன்று சூரியபகவானின் ஒளியைப் பெற்று பிரதிபலிக்கிறார். வெள்ளியிலும் காலை வெள்ளி, மாலை வெள்ளி என்றிருப்பதைக் காண்கிறோம். குருபகவானைப் போலவே சுக்கிரபகவானும் மௌட்யத்தில் (மூடம்) ஆட்படுகிறார். சுக்கிரபகவானின் மூடத்தில் திருமணம் நடைபெறுவது கூடாது என்பது ஜோதிட விதி. பரணி, பூரம், பூராடம் ஆகிய மூன்று நட்சத்திரங்கள் சுக்கிரபகவானுக்குரிய நட்சத்திரங்களாகும். மேஷ ராசியிலுள்ள பரணி நட்சத்திரத்தில் சூரியபகவான் சஞ்சரிக்கும் காலம் முதல் கார்த்திகை நட்சத்திரத்தைக் தாண்டும் வரை உள்ள காலம் (பின் சித்திரை முன் வைகாசி மாதங்கள்) கத்திரி என்றும், அக்னி நட்சத்திரம் என்றும் சொல்லப்படுகிறது. இது உலகில் அதிக அளவு உஷ்ணத்தைத் தரக்கூடிய கோடைக் காலமாகும்.
இந்த ஆண்டு 04.05.2020 முதல் 28.05.2020 வரை அக்னி நட்சத்திரம் காலமாக அமைகிறது. அதாவது, சித்திரை 21- ஆம் தேதி முதல் வைகாசி 15 வரை ஆகும். சிம்ம ராசியிலுள்ள பூரம் நட்சத்திரத்தில் சூரியபகவான் பிரவேசிக்கும் காலம் சூரியபகவானுடைய ஆட்சி, மூலதிரிகோண பலத்தை வெகுவாக ஊக்குவிக்கும் காலமாகும். இக்காலத்திலும் கூட சூரியபகவானின் உஷ்ணம் தகிக்கக்கூடிய காலமாகும். இந்த காலத்தில் சூரியபகவான் கடக ரேகைக்குச் சமீபத்தில் சஞ்சரிப்பார். தனுசு ராசியில் பூராடம் நட்சத்திரத்தில் சூரியபகவான் சஞ்சரிக்கக்கூடிய பதிமூன்றரை நாள்களும் கர்ப்போட்டம் ஓடுகிற காலமாகும். கர்ப்போட்டம் என்றால் வானத்தில் மேக மண்டலங்கள் திரண்டு இங்குமங்குமாக சஞ்சரிக்கக் கூடியதான சுற்றுச் சூழ்நிலை அமையும். ஆனால் இந்த நாள்களில் மழைபொழிவு கூடாது. இப்படி பதிமூன்றரை நாள்களும் தொடர்ந்திருந்து கொண்டிருந்தாலும் அடுத்து வரக்கூடிய ஓராண்டு காலத்தில் மழை பொழிந்து நாடு சுபிட்சமாக இருக்கும். இதுதான் கர்ப்போட்ட மகிமையின் செயல்திறன். இதனால் சுக்கிரபகவானை மழைக்கிரகம் என்றும் சொல்கிறோம்.
சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கு அதிபதியான சனிபகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் சூரியபகவானின் சாரத்தில் (உத்திராடம் நட்சத்திரம்) ஆட்சி பெற்றமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். சனிபகவான் லக்னத்திற்கு நான்காம் வீட்டில் ஆட்சி பெற்றிருப்பதால் பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றானசச மகா யோகத்தைக் கொடுக்கிறார். தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் சந்திரபகவானின் சாரத்தில் (திருவோணம் நட்சத்திரம்) உச்சம் பெற்றமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார். இதனால் பஞ்ச மகா புருஷ யோகங்களில் ஒன்றான ருசக யோகம் உண்டாகிறது. செவ்வாய்பகவானின் நான்காம் பார்வை களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டின் மீதும் அங்கு உச்சம் பெற்று அமர்ந்திருக்கும் சூரியபகவானின் மீதும், ஏழாம் பார்வை தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டின் மீதும், எட்டாம் பார்வை லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டின் மீதும் படிகிறது.
தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் சூரியபகவானின் சாரத்தில் (உத்திராடம் நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் நீச்சம் பெற்று அமர்ந்து இருக்கிறார். குருபகவானுடன் ஆட்சி பெற்றுள்ள சனிபகவானும், உச்சம் பெற்றுள்ள செவ்வாய்பகவானும் இணைந்து இருப்பதால் இரண்டு வகையிலும் முழுமையான நீச்சபங்க ராஜயோகம் பெறுகிறார். குருபகவானின் ஐந்தாம் பார்வை அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் சுக்கிரபகவானின் மீதும், ஏழாம் பார்வை தொழில் ஸ்தானத்தின் மீதும், ஒன்பதாம் பார்வை அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டின் வீட்டின் மீதும் படிகிறது.
பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் ருணம் , ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டில் சனிபகவானின் சாரத்தில் (உத்திரட்டாதி நட்சத்திரம்) நீச்சம் பெற்றமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியில் ஆட்சி, உச்சம் மூலதிரிகோணம் பெறுவதால் புதபகவானும் முழுமையான நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார்.
தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கதிபதியான சந்திரபகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பூராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கு அதிபதியான சூரியபகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் உச்சம் பெற்று வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கிறார். ராகு
பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சுய சாரத்தில் (திருவாதிரை நட்சத்திரம் )அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார். கேதுபகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் சுய சாரத்தில் (மூலம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார்.
இந்த சார்வரி ஆண்டுக்கு அரசனாக புதபகவான் வருகிறார். பாக்கிய நாதனான புதபகவான் முழுமையான நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். புதபகவானின் பலத்தை லக்னாதிபதியான சுக்கிரபகவானின் பலத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டும். லக்னாதிபதி 3, 6, 8,12- ஆம் வீடுகளில் அமர்ந்திருப்பது குறை என்று பொதுவாகக் கூறினாலும் அவரே எட்டாம் வீட்டிற்கும் அதிபதியாகி எட்டாம் வீட்டில் லக்ன சுபரான சந்திரபகவானின் சாரத்தில் வர்கோத்தமத்தில் விபரீத ராஜயோகம் பெற்று ஆட்சி பெற்றமர்ந்திருக்கிறார். லக்னாதிபதி பாக்கியாதிபதியைவிட பலம் கூட பெற்றிருக்கிறார் என்று கூறினாலும், புதபகவான் பன்னிரண்டாமதிபதியாகி எட்டாம் வீட்டோனை விட பலம் கூடி இருக்கிறார் என்று கூற வேண்டும். புதபகவான் நரம்பு மண்டலத்திற்குக் காரகம் வகிப்பவர் என்று கூறினாலும் மனித உடலில் நுரையீரல் அவரது கட்டுப்பாட்டிற்குள் வருகிறது. நுரையீரல் மனித உடலில் சில தனித்தன்மையை கொண்டிருக்கிறது என்பதை அனைவரும் அறிந்ததே.
ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கு அதிபதியான குருபகவான் முழுமையான நீச்சபங்க ராஜயோகத்தைப் பெற்றிருக்கிறார். லக்னாதிபதியான சுக்கிரபகவான் ஆறாம் வீட்டுக்கதிபதியை விட பலம் பெற்றிருக்கிறார் என்று கூறினாலும் ஆறாமதிபதி எட்டாம் வீட்டுக்கதிபதியை விட பலம் கூடியிருக்கிறார் என்றும் கூற வேண்டும். நான்கு, ஐந்து வீடுகளுக்கு அதிபதியான சனிபகவான் சுக ஸ்தானத்தில் ஆட்சி பெற்று சச மகாயோகத்தைப் பெற்றிருக்கிறார். இருப்பினும் அவர் பரஸ்பரம் விரோதம் பெற்ற கிரகமான சூரியபகவானின் சாரத்தில் நேர்கதியில் சஞ்சரிக்கிறார். இந்த நேர்முக சஞ்சாரம் 12.05.2020 வரை தொடரும்.
லாபாதிபதியான சூரியபகவான் பாதகாதிபதியுமாகி நட்பு ஸ்தானத்தில் பரமோட்சம் பெற்று அமர்ந்திருக்கிறார். அவரின்அதி உஷ்ணத்தைப் பெரும் அக்னி நட்சத்திர காலம் 04.05.2020 முதல் 28.05.2020 வரை நடக்கிறது. அவர் சஞ்சரிப்பதோ தன் நண்பரான செவ்வாய்பகவானின் வீடாகும். செவ்வாய்பகவான் மகர ராசியில் உச்சம் பெற்று, 04.05.2020 வரை சஞ்சரிக்கிறார். இந்த காலகட்டம் வரை அவர் தன் பரஸ்பரம் பரம விரோதம் பெற்ற கிரகமான சனிபகவானுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். பொதுவாக, சனி, செவ்வாய் இணைந்த காலங்கள் மிகவும் கடினமாக இருக்கும். சனி, செவ்வாய் பகவான்களுடன் குருபகவான் சஞ்சரிப்பது அவர்களின் விரோதத்தைக் குறைக்கும் அம்சமாகும். குரு, செவ்வாய் பகவானுக்கு நட்பு கிரகமாகவும், சனிபகவானுக்கு சமம் என்கிற அந்தஸ்தில் இருக்கும் கிரகமாகவும் ஆவதால் இத்தகைய இணைவால், ஏற்படும் கஷ்டங்கள் குறைந்து மட்டுப்பட்டே காணப்படும். அதனால் 28.05.2020 -க்குப் பிறகு, அனைத்து கஷ்டங்களும் மறைந்து சுபிட்சம் உண்டாகத்தொடங்கும்.
இந்த ஆண்டில் சனிபகவான் பலம் பெற்று சஞ்சரிப்பதால் மக்களுக்கு நீடித்த நல்வாழ்வையும் , தீர்க்காயுளையும் கொடுப்பார் என்றும் கூறவேண்டும். காரணம் கண்டு பிடிக்க முடியாத வியாதிகளுக்கு ராகுபகவான் காரணமாகிறார். ராகுபகவான் அசுப பலம் பெற்று சஞ்சரிப்பவர்களுக்கு காரணம் கண்டுபிடிக்க முடியாத நோய் பாதித்து அந்த காலம் மாறியவுடன் அந்த நோய் தானாகவே தீர்ந்து விடும். மேற்கூறிய விஷயம் கேதுபகவானுக்கும் பொருந்தும். தற்சமயம் ராகுபகவான் காற்று ராசியாகிய மிதுன ராசியில் தன் சுயசாரத்தில் (திருவாதிரை நட்சத்திரம்) சஞ்சரிக்கிறார். விஷத்திற்கு ராகுபகவானே காரகமேற்கிறார். 22.04.2020 அன்று ராகுபகவான் திருவாதிரை நட்சத்திரத்தை விட்டு மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறார். அதற்குப்பிறகு விஷத்தால் ஏற்பட்ட கஷ்டங்கள் குறையத் தொடங்கிவிடும்.
புதபகவான் லக்ன சுபராக இருந்து அரசனாகவும் ஆவதால் இந்த ஆண்டு தொடக்கத்தில் சில அசாதாரண சூழ்நிலைகள் உண்டானாலும் வைகாசி மாதம் நடுவிலிருந்து நன்மைகள் கூடத் தொடங்கிவிடும். புதபகவானுக்கு உகந்த தலமானமதுரையை ஆட்சி செய்வது மீனாட்சி சொக்கநாதராவார்கள். மதுரை சிவபெருமான் திருவிளையாடல் புரிந்த தலம் என்பதும் அனைவரும் அறிந்ததே. அவர் நாம் வசிக்கும் இந்த பூமியின் மண்ணைச் சுமந்தவர். இந்த பாக்கியம் பெற்ற நமது பாரத பூமி, குறிப்பாக தமிழிநாட்டிற்கு சொக்கநாதப் பெருமானின் கருணை நிரம்ப இருக்கும் என்பதில் எந்த ஓர் ஐயமுமில்லை. அனைவரும் ஸ்ரீ மீனாட்சி ஸ்ரீ சொக்கநாதரின் அருளைப் பெற தினமணியின் மூலமாக பிரார்த்திக்கிறோம்.