திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யார் பேருந்து நிலையத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது "பெரிய கோயில் கிராமம்'. ஊரின் பெயரும் அதுவே. இங்குள்ள நித்யகல்யாணவரதர் ஆலயம், சுமார் 450 ஆண்டுகளுக்கு முன் பாரத்வாஜ வம்சத்திலுதித்த ஸ்ரீ உ.வே.சிம்மகுட்டி ஐயங்கார் வம்சத்தார்களால் கட்டப்பட்டது என்று செவி வழி செய்தி மூலம் அறியப்படுகின்றது.
காஞ்சி மண்டலத்திற்கும் இக்கோயிலுக்கும் ஒரு காலத்தில் அதிக தொடர்பு இருந்தது. ஆதலால், காஞ்சி ஸ்ரீ தேவாதிராஜப் பெருமாளின் கைங்கர்ய அன்பர்களால் வேதபாராயணங்கள் நடந்து வந்ததாக கூறப்படுகின்றது. இக்கோயில் ஸ்ரீமத் அஹோபிலமடத்து முக்கூர் அழகியசிங்கர் 44 -ஆவது பட்ட அழகியசிங்கரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமையுடையது. கடைசியாக, இவ்வாலயத்தில் 2012 -ஆம் ஆண்டு, சம்ப்ரோக்ஷண வைபவம் நடந்தேறியது.
இத்திருக்கோயிலின் மூலமூர்த்தி நித்யகல்யாண வரதாஜப்பெருமாள் ஆகையால் திருமணத்தடை உள்ளவர்கள், புத்திரபாக்கியம் இல்லாதவர்கள் சர்ப்ப தோஷமுள்ளவர்கள், திருமணமாகி பிரிந்துள்ள தம்பதிகள் இங்குள்ள காளிங்கநர்த்தன கிருஷ்ணனையும் சேர்த்து சேவித்தால் மேற்சொன்னவைகள் 42 நாள்களில் தடைகள் விலகும் என்பது கண்கூடாக நடந்து வரும் உண்மை! நம்பிக்கையுடன் பக்தர்கள் பங்கேற்கின்றனர். மேலும், இவ்வாலயத்தில் தனித்தாயார் சந்நிதி, ஆஞ்சநேயர் சந்நிதி, ஆண்டாள் சந்நிதி, ஆழ்வார்கள் சந்நிதி, மடப்பள்ளி நாச்சியார் ஆகியவைகள் வழிபாட்டில் உள்ளன.
இவ்வாலயத்தில் 8 -ஆவது ஆண்டு உத்ஸவம், ஜனவரி 19 -ஆம் தேதி, ஞாயிறு அன்று சிறப்பு திருமஞ்சனம், சகஸ்ரநாம அர்ச்சனை, சாற்றுமறை, திருவீதி புறப்பாடு போன்ற வைபவங்களுடன் நடைபெற உள்ளது. இத்திருத்தலம் செல்ல, செய்யாரிலிருந்து ஆட்டோ வசதி உள்ளது.
தொடர்புக்கு: 94443 76082.