இரட்டையர் ஏசாவும் யாக்கோபுவும்

இரட்டையர் ஒரே பிரசவத்தில் பிறப்பது உண்டு, ஆண், ஆண் குழந்தைகளாகவும் பெண், பெண் குழந்தைகளாகப் பிறக்கின்றனர்.
இரட்டையர் ஏசாவும் யாக்கோபுவும்

இரட்டையர் ஒரே பிரசவத்தில் பிறப்பது உண்டு, ஆண், ஆண் குழந்தைகளாகவும் பெண், பெண் குழந்தைகளாகப் பிறக்கின்றனர். பத்தாயிரம் இரட்டையர் பிறப்பில் மட்டும் ஆண், பெண் குழந்தைகள் பிறக்கின்றனர். உருவ அமைப்பில் ஒரே அச்சாக இருந்தாலும் எண்ணம், குணநலம் வேறுபட்டு இருப்பர். இறைவன் படைப்பில் ஒருவர் போல் ஒருவர் இல்லை. பொதுவாக இரட்டையர்கள் அறிவு அதிகமுள்ளவராகவும் அழகாகவும் இருப்பார்கள். குறிப்பாக இரட்டையர் பெண்குழந்தைகள் மிகவும் அறிவு மிகுந்தவராகவும் மிக அழகு உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

வேதாகமத்தில் இரட்டையர் பற்றிய வரலாறு உள்ளது. ஆபிரகாமின் மகள் ஈசாக்கு ரெபெக்கள் திருமணம் ஆபிரகாம் விரும்பியபடியே கர்த்தர் வாய்க்கச் செய்தார். ரெபெக்காளுக்கு பிள்ளைச் செல்வம் இல்லை. கர்ப்பம் அடைபட்டிருந்தது. ஈசாக்கு ஜெபித்தபோது, கர்த்தர் கேட்டு கர்ப்பத்தைத் திறந்தார். ரெபெக்காள் கருவுற்று இரட்டையரைப் பெற்றாள். ஏசா, யாக்கோபு என பெயரிட்டு வளர்த்தனர். ஏசா வேட்டையாடுவதில் வீரன். யாக்கோபு ஆடுகள் மேய்ப்பன். ஏசா அப்பா பிள்ளை. யாக்கோபு அம்மா பிள்ளை. யாக்கோபு மிகவும் தந்திரசாலியாக இருந்தான். ஏமாற்றுக்காரன். எனவே யாக்கோபு என்றால் ஓடுகிறவனுக்கு கால் கொடுப்பவன். தடை செய்து விழ வைக்கிறவன் எனப்பட்டான் (ஆதியாகமம் 25; 21-26)
ஈசாக்கு வயது முதிர்ந்தவர் ஆனார். அவரின் பார்வை இருள் அடைந்தது. சீக்கிரம் மரித்துவிடுவதை அறிந்து தம் மூத்த மகன் ஏசாவை அழைத்து, ""உன்னை ஆசீர்வதிக்கப்போகிறேன்; நீ வேட்டையாடி நல்ல உணவும் திராட்சை ரசமும் கொண்டு வா'' என்றார். ரெபெக்காள் இதைக் கேட்டு தனது இளைய மகன் யாக்கோபை அழைத்து, "" நீ போய் மந்தையில் இரு வெள்ளாட்டு குட்டிகளைக் கொண்டு வா. அவற்றை நன்கு ருசியாக சமைத்துத் தருகிறேன். உன் அண்ணன் ஏசா வருவதற்கு முன்னாக நீ ஏசா போல் நடித்து, உன் தந்தையின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்'' என்றாள். யாக்கோபு மறுத்தாலும் அம்மாவின் சொற்படியே செய்தான்.
ஏசாவின் உடையை உடுத்திக் கொண்டான். கைகளிலும் கழுத்திலும் ஆட்டுத் தோலை முடி அடர்த்தியான ஏசாவின் கை கழுத்துப் போல் கட்டிக் கொண்டு தன் தாய் சமைத்துக் கொடுத்த ருசியான உணவையும், திராட்சை ரசத்தையும் பார்வை இருளடைந்த தன் தகப்பனிடத்தில், ""அப்பா நான் ஏசா வந்துள்ளேன். இவ்வுணவை உண்டு என்னை ஆசீர்வதியும்'' என்றான்.
ஈசாக்கு கைகளைத் தடவிப் பார்த்தார். ஏசாவைப் போலவே இருந்தது. ஆடையை முகர்ந்து பார்த்தார். ஏசா உடையைப் போலவே வாசனை தெரிந்தது. ஆனால் குரல் யாக்கோபுவின் குரல் போல இருந்தது. ஆனாலும் உணவை ருசித்து உண்டார்.
ரசத்தைப் பருகி யாக்கோபை அருகில் அழைத்து, ""பூமியின் செழுமை உனக்குக் கொடுக்கப்படும்; திரண்ட தானியம் உனக்கு விளையும். ஜனங்கள் உன்னை சேவிப்பார்கள். உன் சகோதரர்களுக்கு எஜமானனாயிருப்பாய். உன் தாயின் பிள்ளைகள் உன்னை வணங்குவார்கள். நீ யாரை ஆசீர்வதிக்கின்றாயோ அவன் ஆசீர்வதிக்கப்படுவான். நீ யாரை சபிக்கின்றாயோ அவன் சபிக்கப்படுவான்'' என்றார்.
இவ்வாறு எல்லா ஆசீர்வாதங்களையும் திருட்டுத்தனமாய் யாக்கோபு பெற்றுக் கொண்டான். ஏசா வேட்டையாடி கொண்டு வந்த மிருகத்தை நன்கு சமைத்து ரசமும் எடுத்துக் கொண்டு வந்து தன் தந்தையை எழுப்பி ஆசீர்வதிக்க வேண்டினான்.
ஈசாக்கு தான் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அவன் தம்பி எல்லா ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொண்டதைக் கூறினார்.
ஏசா ஏமாற்றப்பட்டார். யாக்கோபு ஏமாற்றுக்காரனாக இருந்தாலும், ஈசாக்கு ஆசீர்வாதம் பலித்தது.
கர்த்தர் யார் பேரில் இரக்கமாக இருக்கிறாரோ அவன் இரக்கம் பெறுவான். தேவனால் இரக்கம் பெற்றவர் ஆவோம். இறையருள் நம்மோடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com