உத்தரப் பிரதேசம் பைசாபாத் மாவட்டத்தில் உள்ளது அயோத்தி. இப்புண்ணிய பூமியில் எதிர்வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற இருக்கின்றது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில், ஒரு வைணவ திவ்ய தேசம் என்ற கோணத்தில் அயோத்தியின் பெருமையை அறிவோம்:
திவ்ய தேசம்: ஆழ்வார்கள் பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற திருமால் தலங்கள் "வைணவ திவ்ய தேசங்கள்' என அழைக்கப்படுகின்றன. இவை மொத்தம் 108 ஆகும். அதில் வடநாட்டு திவ்ய தேசங்கள் 11-இல் ஒன்று திரு அயோத்தி (அயோத்யா).
முக்தி தலம்: நமக்கு மோக்ஷம் அதாவது முக்தி தரும் தலங்களாக ஏழினைக் குறிப்பிடுகிறார்கள். அதில் முதன்மையானது அயோத்தி மற்றவை, காஞ்சி, மதுரா, ஹரித்துவார், காசி, அவந்திகா, துவாரகா என்பன.
தல வரலாறு: ஸ்ரீவைகுண்டத்தின் மையத்திலிருந்து ஒரு பகுதியைப் பிரித்து ஸ்ரீமந்நாராயணன் பிரம்ம தேவரிடம் கொடுக்க அவர் தனது புத்திரன் ஸ்வாயம்புவ மனுவின் மூலம் சரயூ நதிக்கரையின் தெற்கு கரையில் ஸ்திரப்படுத்தினார். அதுவே அயோத்திமா நகரமாகும். இத்தலத்திற்கு "அபராஜிதா' என்ற சிறப்புப் பெயரும் உண்டு.
சரயூ நதியின் சிறப்பு: பிரம்மனின் மனம் உருகி ஒரு பெரிய நதியாக மாறி வந்தது எனப்படுகிறது. வசிஷ்ட மகரிஷியின் ஆணைப்படி, பரமபத ஸத்ய புஷ்கரணி என்ற பெயரில் இப் பூவுலகில் சரயூ நநி தீர்த்தமாக வாசம் செய்ய வந்ததாகவும் கூறப்படுகிறது. தன் அவதார நோக்கம் நிறைவேறிய பின், ஸ்ரீஇராமபிரான் தன் பரிவாரங்களுடன் (ஆஞ்சநேயரை அயோத்தியை காவல் காக்கப் பணித்து விட்டு) இந்த நதியில்தான் இறங்கி ஸ்ரீவைகுண்டம் ஏகினார் என்று கூறுவார்கள்.
ராம ஜென்ம பூமி: சூரிய வம்ச மன்னர்களின் தலைநகராக விளங்கிய இத்தலத்தில் தான் ஸ்ரீராமபிரான் தசரத சக்கரவர்த்தி திருமகனாக அவதாரம் செய்தார். இட்சுவாகு மன்னன் தவமிருந்து பிரம்ம தேவனிடமிருந்து பெற்ற பள்ளி கொண்ட நாதனை (ஸ்ரீரங்கம் ரங்கநாதர்) குலதெய்வமாக அயோத்தியில் வைத்துத்தான் முதற்கண் வழிபடப் பெற்றது.
ஆழ்வார்கள் மங்களாசாசனம்: பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர்களால் மங்களா சாசனம் செய்து அருளிய 13 பாடல்கள் இத்தலத்திற்கு உண்டு. நம்மாழ்வார் பாசுரத்தில் "நான் முகன் பெற்ற நாடு' என அயோத்தி குறிப்பிடப்படுகிறது. வாழ்வில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய புண்ணிய ஸ்தலம் "அயோத்தி'.