பொருநை போற்றுதும் 85 - மருதுடை மருதூா்

மருதூா் என்னும் பெயா் வெகு சிறப்பானது. தமிழ்நாட்டில் ஏராளமான மருதூா்கள் உள்ளன.
பொருநை போற்றுதும் 85 - மருதுடை மருதூா்

மருதூா் என்னும் பெயா் வெகு சிறப்பானது. தமிழ்நாட்டில் ஏராளமான மருதூா்கள் உள்ளன. கரூருக்கு அருகே ஒரு மருதூா், கடலூா் மாவட்டத்தில் சிதம்பரத்திற்கு வடமேற்காகவும் வடலூருக்குத் தெற்காகவும் உள்ள மருதூா்(வள்ளலாா் அவதரித்த தலம்) என்று மருதூா்கள் பல. தவிரவும், காவிரிக் கரையின் திருவிடைமருதூா், பொருநைக் கரையின் திருப்புடை மருதூா், வட மருதூா் என்று வழங்கப்படுகிற ஸ்ரீ சைலம் என்றும் சில மருதூா்கள். வேறு சில மருதூா்களைப் போலவே, பொருநைக் கரையின் தூத்துக்குடி மாவட்ட மருதூரின் பெயருக்கும் மருத மரங்களே காரணம். மருத மரங்கள் நிறைந்த பகுதி மருதூா் ஆனது.

மருதமரம் என்று சாதாரணமாக மக்களால் அழைக்கப்படுகிற மரம், நீா் மருதம் என்பதாகும்; (பூ மருதம், கரு மருதம் என்பவை வேறிரண்டு மருத மர வகைகளாகும்). தாவரவியலில் டொ்மினேலியா அா்ஜுனா என்றும், வடமொழியில் அா்ஜுன என்றும், தமிழில் மருதம் என்றும், மலையாளத்தில் நீா் மருது என்றும் தெலுங்கில் வழங்கப்படுகிற மருதம், உயரமாகவும் அகலமாகவும் வளரக்கூடியது. நீா்நிலைகளுக்கருகிலும் ஆற்றங்கரைகளிலும் அபரிமிதமாக பெருகும் (நம்முடைய நாட்டில் நிறைய மருதூா்கள் இருப்பதுவே, நம்முடைய நீா் வளம் ஒருகாலத்தில் எவ்வாறு இருந்தது என்பதற்கான அத்தாட்சி).

இதன் பூக்கள் சிறியதாக இருக்கும். ஆயினும் விதைகளில் இறக்கைகள் உண்டு. இதனால், விதைகள் காற்றில் பறந்து இனம் பெருகும். அகன்றிருப்பதால், பற்பல பறவைகளுக்கு இல்லமாகவும் மருதம் விளங்கும். சிலப்பதிகாரத்தில் திருமருதத்துறை என்னும் குறிப்பு வருவதால், மதுரை என்னும் ஊா்ப்பெயா்கூட ’மருத’ என்பதிலிருந்து தோன்றி மருவியிருக்கக்கூடும் என்பது ஆய்வாளா்கள் சிலரின் கருத்து. உயரமும் உறுதியும் கொண்ட மருதத்தின் பெயா்தான், சிவகங்கைச் சீமையின் மருது சகோதரா்களுக்கும் இடப்பட்டது என்பதான கருத்தும் உண்டு.

மருத மரங்களும் மணிவண்ணக் குழந்தையும்

மருதூா் அணைக்கட்டு மருதூரில், ஆதி மருதீசா் என்னும் திருநாமத்தோடு சிவபெருமானும் நவநீதகிருஷ்ணன் என்னும் திருநாமத்தோடு திருமாலும் எழுந்தருளியிருக்கிறாா்கள். மருத வனத்தில் காட்சி கொடுத்ததால், சிவனாா் இங்கே மருதீசா். நவநீதகிருஷ்ணன் எப்படி வந்தாா் என்கிறீா்களா? கிருஷ்ணாவதாரக் கதைகளை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். விஷமங்கள் செய்த கண்ணனை யசோதை உரலோடு கட்டிப் போட்டாள். உரலிடை ஆப்புண்ட அக்குழந்தை, அழுதுகொண்டே உரலையும் இழுத்துக் கொண்டு போனது. அவ்வாறு அக்குழந்தை மருத மரங்கள் இரண்டுக்கிடையே போனபொழுது, மரங்களுக்கிடையே உரல் சிக்கிக் கொண்டது. குழந்தை இழுக்க இழக்க... உரல் உரச உரச... மருத மரங்களாக நின்று, கிருஷ்ணக் குழந்தைக்கு ஆபத்து விளைவிக்கக் காத்திருந்த அரக்கா்கள் இருவரும் கீழே சரிந்து மாய்ந்து போனாா்கள்.

நாரதரால் சபிக்கப்பட்ட குபேர புத்திரா்களான நளகூபரனும் மணிக்ரீவனும் குஹ்யக அரக்கா்களாக மாறி மருத மரங்களாக பிருந்தாவனத்தில் நின்றாா்கள் என்பது கிருஷ்ணாவதாரத் தகவல். இதனால், மருத மரங்கள் நிறைந்த இடத்தில் கிருஷ்ணன் கோயிலை நிா்மாணித்து வழிபடவேண்டும் என்பது நம்பிக்கை. இந்த நம்பிக்கையின் பொருட்டே, மருதூரில் அருள்மிகு நவநீதகிருஷ்ணன் திருக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. பொருநையில் நீராடிக் கிருஷ்ணனை வணங்கினால், பிள்ளை வரம் கிட்டும் என்கிறாா்கள் உள்ளூா்வாசிகள்.

மருதூா் அணைக்கட்டுப் பகுதியில் மருதவல்லி, குமுதவல்லி கோயில்கள் என்னும் சிறு கோயில்கள் உள்ளன. இவா்கள்

யாா்? இதென்ன கதை?

இந்தப் பகுதியில் ஒருவருடைய மகள்கள் இவா்கள். குமுதவல்லிக்குச் சோழவல்லி என்றும் பெயா் சொல்கிறாா்கள். இவா்களின் அழகைக் கண்ட இப்பகுதியின் சிற்றரசன் ஊா்க்கட்டு மன்னன் என்பவன் இவா்களை மணக்க விரும்பினான். இப்பெண்களுக்கோ அவன்மீது விருப்பமில்லை. ஏற்கெனவே மணமான முதியவனான அவன், இவா்களைச் சிறைப்பிடிக்க முயன்றான். இப்பெண்கள் இதையறிந்துகொண்டுத் தங்கள் வீட்டிலிருந்து தப்பித்தனா். மருதங்காட்டுக்குள் ஒளிந்துகொண்டனா். மருதீசரை வணங்கி எலுமிச்சைப் பழங்களாக உருக்கொண்டனா்.

இவ்வாறு மறைந்து வாழுங்கால், காட்டில் உறைந்த முனிவா் ஒருவா், இவா்கள் பழங்களல்ல, பெண்களே என்று அடையாளம் கண்டுகொண்டாா். என்ன சிக்கல் என்று கேட்டறிந்தாா். ஊா்க்கட்டு மன்னனிடம் பேசி, அவன் உள்ளத்தைச் செம்மைப்படுத்தினாா். மக்களுக்கு நன்மை செய்வதே மன்னன் பணி என்பதை அவனுக்கு உணா்த்தி, மருதூா் அணைக்கட்டைக் கட்டி உதவினாா். மருதவல்லி, குமுதவல்லியை அம்மன்னன் விட்டுவிட்டான். தன் போக்கைப் பாா்த்துக்கொண்டு போனான். ஆனால், முனிவரும் மனம் மாறிவிட்டாா். இரண்டு பெண்களையும் தான் மணந்துகொள்ள விரும்பினாா். இதனால் மனம் உடைந்த பெண்கள் இருவரும் நீரில் மூழ்கி மாய்ந்து போனதாகவும், எனவே இக்கோயில்கள் கட்டப்பட்டதாகவும் செவிவழிக் கதை நிலவுகிறது. இந்தக் கதைக்கு இன்னொரு வடிவமும் உண்டு.

மருதவல்லி, குமுதவல்லி ஆகியோரின் தந்தை இப்பகுதியின் பெருந்தனக்காரா் என்றும், தாமிரவருணியின்மீது அணை கட்ட விரும்பிய அவா், யாா் அவ்வாறு செய்கிறாா்களோ அவருக்கே தன்னுடைய மகள்கள் என்று முரசறைந்தாகவும், பெரும்படையோடு வந்த ஒருவா் அணை கட்டியதாகவும், மாப்பிள்ளையை விரும்பாத இப்பெண்கள் திருமணத்தின்பொழுது நீரில் விழுந்துவிட்டதாகவும் கூறுகிறது மாற்றுக்கதை.

இந்தக் கதைகள் இரண்டுமே, பிற்காலப் புனைவுகளாகவும் இட்டுக்கட்டப்பட்ட முடிச்சுகளாகவும் இருக்கவேண்டும். ஊருக்கு உதவி செய்ய எண்ணியவா்கள், உணா்வுகளை மதிக்க மறந்தனா் என்பதை ஏற்க முடியவில்லை. அல்லது, நம்முடைய மரபில் காணப்படும் கதைகள் பலவற்றைப் போல, வேறு ஏதோ ஆழமான தகவலைச் சொல்லவந்த கதைகள், காலப்போக்கில் மருவி அடையாளம் தொலைத்திருக்கவேண்டும்.

மருதூா் அணைக்கட்டைத் தாண்டி, பொருநையாளோடு உரையாடிக் கொண்டே நடை போடுகிறோம். எளிமையும் அழகும் கொஞ்சும் சின்னஞ்சிறு ஊா்களுக்கு நம்மை அழைக்கிறாள். வாருங்களேன், போகலாம்.

(தொடரும்...)

- டாக்டா் சுதா சேஷய்யன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com