என்னிடம் உன் மனம் நிலைத்திருப்பதால்,"நீயே சிதாத்மா' என்ற சாட்சாத் காரம் உனக்குக் கிடைக்கும். சிதாத்மாவோ எப்போதும் பரிசுத்தமாக இருக்கிறது, அது புலன்களிலிருந்தும் வேறுபட்டது,முக்குணங் களிலிருந்தும் வேறுபட்டது, வடிவங்களிலிருந்தும் வேறுபட்டது. இந்தச் சாட்சாத்காரத்தைப் பெற்றவுடனே நீ பரஞானம் பெற்றவனாவாய். நீயே ஒரு பெரிய உண்மையை உன் வாழ்க்கையில் அனுபவிப்பது சாத்தியமாகும். "ஆத்மா உடல் அல்ல, பிராணன் அல்ல, புத்தி அல்ல, அகங்காரமும் அல்ல' என்பதுதான் அந்தப் பெரிய உண்மை.
-ஸ்ரீராமர் லட்சுமணனுக்கு வழங்கிய அறிவுரை
விஷ்ணுவே வெளிப்படையாகத் தோன்றும் பொருள்களாகவும், வெளிப்படையாகத் தோன்றாத பொருள்களாகவும், ஸ்தூலமாகவும், சூட்சுமமாகவும், காலமாகவும் இருப்பவர். அவருக்கு இவை விளையாடும் ஒரு குழந்தையின் லீலைகளைப் போல என்று அறிந்துகொள்ளுங்கள்.
-வசிஷ்டர் (விஷ்ணு புராணம்)
பண்டிதனிடம் எல்லா நற்குணங்களும் இருக்கின்றன. மூர்க்கனிடம் எல்லாத் தீய குணங்களும் இருக்கின்றன. ஆயிரம் மூர்க்கர்களை விட ஒரு பண்டிதன் மேலானவன்.
-ஹிதோபதேசம்
"ஸ்ரீ ராமபக்தி' என்ற செல்வத்தைப் பெற்றவரைத் தரிசித்தல் பேரானந்தம். அதைச் சொல்லித் தெரிவிக்க முடியாது; உணரத்தான் வேண்டும்.
-மகான் தியாகராஜர்
தாமரையிலையின் மீது இருக்கும் தண்ணீர் ஒட்டாமல் சஞ்சலமானதாக இருக்கும்; அது நிரந்தரமானது அல்ல. அதே மாதிரிதான் உடலில் உயிரும் அதிசயிக்கும்படி சஞ்சலமானதாக இருக்கிறது; அது நிரந்தரமானதல்ல.
-ஆதிசங்கரர்
நீ இறைவனின் வாசலில் வீழ்ந்து கிடக்க வேண்டும்; பிரபு கொடுக்கும் உதையை ஏற்றுக்கொள். அவனது வாசலை நாம் விடாமல் இருக்க வேண்டும். அவ்விதம் செய்தால் அவன் நம்மை என்றைக்காவது காப்பாற்றுவான்.
-கபீர்தாசர்
நீரைப் பிரித்து பாலை அருந்தும் விந்தையை அன்னப்பறவை மட்டுமே அறியும்; வேறு எதுவும் அறியாது. அதுபோல் கர்த்தாவாகிய இறைவனையும் காரியமாகிய பிரபஞ்சத்தையும் ஞானிகள் மட்டுமே விவேகித்து அறிவார்கள்; அக்ஞானிகள் அறியமாட்டார்கள்.
-கவி வேமன்னா