குரு பகவானுக்கும் சந்திர பகவானுக்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்கிறது. இந்த சம்பந்தம் நல்ல விதமாக அமைந்தால் அந்த ஜாதகர் உண்மையில் ஒரு யோகசாலி ஆவார்.
சகடை (குரு பகவானுக்கு சந்திர பகவான் ஆறு, எட்டாம் வீடுகளில் இருப்பது) போன்ற அவயோக அமைப்பில் இருந்து விட்டால் அந்த ஜாதகரைப் போல் அவ்வப்பொழுது கஷ்ட ஜீவனத்திற்கு உட்படுபவர் வேறு ஒருவர் இருக்க முடியாது.
ஒருவேளை நல்ல படியே இருந்து வரக்கூடியவராக இருந்து விட்டாலும், அந்த "சகடை ஜாதகம்' என்ற அமைப்பானது ஒருநாள் காலை வாராமல் விட்டு விடாது.
சகடை என்றால் சக்கரம் என்று பொருள். எப்படி சக்கரம் கீழிருந்து மேலாகவும், மேலிருந்து கீழாகவும் செல்கிறதோ அது போல் வாழ்க்கையும் ஏற்ற இறக்கமாகச் செல்லும் என்பது சகடை தோஷத்தின் பொருளாகும். இதற்காக பிரதி திங்கள்கிழமைகளில் சந்திர பகவானையும், பார்வதிதேவியையும், வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் தொடர்ந்து வழிபட்டு வர வேண்டும்.
சகடை தோஷம் என்ன செய்யும்?
சகடை தோஷம் என்ன செய்யும்? என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது அல்லவா? அதையும் கீழே கொடுத்திருக்கிறோம். சகட தோஷம் உள்ள ஜாதகர்களுக்கு கீழ்க்கண்ட இரு பாடல்களின்படி பலா பலன்கள் நடைபெறவே செய்யும் என்பது ஜோதிட விதி.
(1) "அகடின் மன்னனுக் காறெட்டோடு வியத்தி கடிலாமதி எய்தி இருந்திடின், சகட யோகமிதில் பிறந்தார்க்கெல்லாம் விகட துன்ப விளையுமரிட்டமே'.
(2) "மேலெழு வியாழன் நின்ற ராசிக்கு ஆறீராரெட்டில் மாலை வெண்மதியஞ் சேரில், வந்த நாட் சகடை யோகம் பாலகன் பிறக்கிற் சாவான். பழிபடு மணத்தைச் செய்யின் ஞாலமேல் வழியைப் போகில் நலமில்லை நறுமின் கொம்பே'
சகடை ஜாதக அமைப்பில் பிறந்தவர்களுக்கு உடல் நலம் சரியாக இருக்காது. குடும்ப வாழ்க்கையும் சுகப்படாது. எல்லாமே காலம் கடந்துதான் நடைபெறும். காரிய சாதனை கூடி வரும்போது அது தடைப்பட்டு நின்று விடும். மறைமுக பகைவர்களின் பலம் அதிகமாக இருக்கும். கலகம், குழப்பங்களும் கூட இவர்களுக்கு எதிராக நடைபெற்று, அதில் இவர்கள் கஷ்ட நஷ்டத்தை
அடைவார்கள்.