ஞானமேதை லுக்மான் (அலை) அவர்கள் தங்கள் மகனுக்கு செய்த உபதேசத்தை அல்லாஹ் குர்ஆனில் நமக்கு உபதேசமாகக் கூறியுள்ளான்:
"எனதருமை மகனே ! நீ தொழுகையை நிலைநிறுத்துவாயாக! மனிதர்களுக்கு நன்மையை ஏவி தீமையைத் தடுப்பாயாக! உனக்கு ஏற்படும் துன்பத்தின் மீது நீ பொறுமையைக் கடைப்பிடிப்பாயாக! நிச்சயமாக இது காரியங்களில் மிக்க உறுதியானதாகும்'.
நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: ஓர் இறை நம்பிக்கையாளருக்கு ஏற்படும் வலி, துன்பம், நோய், கவலை மற்றும் அவர் உணரும் சிறு மனவேதனை உள்பட எதுவாயினும் அதற்குப் பகரமாக, அவருடைய பாவங்களில் சில மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை.
ஏதேனும் மனம் சஞ்சலப்படும்படியான விஷயங்கள் நிகழ்ந்துவிட்டால் நபி (ஸல்) அவர்கள் தொழுகையின் பக்கமே கவனம் செலுத்துவார்கள்.
அல்லாஹ்வின் உண்மையான அடியார்க்கு அல்லாஹ்வின் சமூகத்தில் மிகவும் உயர்ந்த ஓர் அந்தஸ்து எழுதப்பெற்றுள்ளது. ஆனால் அந்த அந்தஸ்தை அவன் தன்னுடைய நற்செயல்களால் மட்டும் அடைய இயலாது. அல்லாஹ் அவனை, அவனுடைய உடல், செல்வம், குழந்தைகள் ஆகியவற்றைக் கொண்டு சோதிக்கிறான். அந்தச் சோதனைகளில் அவன் வெற்றி பெற்றுவிடுகிறான். இந்த அந்தஸ்து அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்டு அவனுக்காக எழுதப்பெற்றது.
அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான்: தொழுகையைக் கொண்டும்,பொறுமையைக் கொண்டும் உதவி தேடுங்கள். ஏதேனும் துன்பம் நிகழ்ந்துவிட்டால் முதலில் இஸ்திஃபார் (பாவமன்னிப்பு) கேட்பதும், தொழுகையில் ஈடுபட்டும், பொறுமையை மேற்கொண்டும் அல்லாஹ்விடம் துஆ செய்து கொண்டிருந்தால், அல்லாஹ்வின் கிருபையைக் கொண்டு அத்துன்பம் நீங்கிவிடும் அல்லது அதற்குப் பகரமாக மறுமையில் உயர் அந்தஸ்திற்கும், மன்னிப்பிற்கும் அது காரணமாகிவிடும்.
உங்களுக்கு ஏதாவது மனக்கஷ்டம் ஏற்பட்டால், அதனை எவரிடமும் கூறாதீர். அதனால் அக்கஷ்டம் நீங்கிவிடப் போவதில்லை. மாறாக, மனக்கஷ்டம் எதனால் ஏற்பட்டது என்று சற்று சிந்தனை செய்யுங்கள். உங்களுடைய செயலே அதற்குக் காரணம் என்று இருந்தால், அதனைத் திருத்திக் கொள்ள முயற்சியுங்கள். விதியால் ஏற்பட்ட துன்பம் என்றால் அதனை பொறுமையோடு எதிர்கொண்டு அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்; அல்லாஹ் அதனை எளிதாக்கி வைப்பான்..!
- ஹாஜி மு.முஹம்மது அன்வர்தீன்