ராகு பகவானுக்கு 2, 5, 11-ஆம் இடங்களில் ஒன்றில் சந்திர பகவான் இருக்கும் நிலை ஏற்பட்டால் நன்மைகள் கூடும். அதாவது ராகு பகவான் இருக்குமிடத்தை லக்னமாகக் கொண்டு பார்த்தால் இரண்டாமிடம் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமாகும். சந்திர பகவானுக்கு இரண்டாமிட பலன்களைக் கணக்கிட்டோமேயானால், ஜாதகருக்கு நல்ல படிப்பு, பண்பு, அதனால் உயர்வான பலன்களை ஜாதகர் பெறமுடியும். அதோடு சந்திர பகவானுக்கு பன்னிரண்டாம் வீட்டில் ராகு பகவான் இருப்பது மஹாசக்தி யோகமாகும். ராகு பகவானுக்கு ஐந்தாமிடத்தில் சந்திர பகவான் இருந்தால், ஜாதகருக்கு நல்ல புத்தியும், ஞான விருத்தியும் ஏற்படும்.
ராகு பகவானுக்கு பதினொன்றாமிடத்தில் (லாப ஸ்தானத்தில்) சந்திர பகவான் இருக்க ஜாதகர் நல்ல குணவானாகவும், பணக்காரராகவும், சத் புத்திர பாக்கியம் உடையவராகவும் திகழ்வார். இதிலிருந்து நாம் அறிய வேண்டியது என்னவென்றால், ராகு பகவான் இருக்குமிடத்திலிருந்து சிறப்பான இடங்களில் சந்திர பகவான் இருக்கும் அமைப்பு உருவாவதால் ஜாதகருக்கு பொருளும், புகழும் ஏற்படுகிறது. ராகு பகவானின் மூன்றாம் பார்வை எட்டாம் வீட்டிற்கும், ஏழாம் பார்வை பன்னிரண்டாம் வீட்டிற்கும், பத்தாம் பார்வை மூன்றாம் வீட்டிற்கும் கிடைப்பதால் இந்த யோகம் சிறப்படைகிறது.
மாரகம் அல்லது துயர் தரும் தசைகள்: நான்காம் தசையாக சனி மஹா தசையும், ஐந்தாம் தசையாக செவ்வாய் மஹா தசையும், ஆறாம் தசையாக குரு மஹா தசையும், ஏழாம் தசையாக ராகு மஹா தசையும் வந்தால் அதை மாரக தசை அல்லது துயர் தரும் தசை என்று கூறுவார்கள். இந்த மாரக கிரகங்களின் காலத்தில் இந்த கிரகங்களை செவ்வாய், சனி, ராகு, சூரிய பகவான்கள் பார்த்தாலும், சேர்ந்தாலும் மாரகத்திற்கு பதிலாக யோகம் உண்டாகும். லக்னாதிபதியும், ஆயுள் ஸ்தானாதிபதியும் மிகுந்த பலகீனமடைந்து, மாரக கிரகங்களும் அசுபர் சம்பந்தமின்றி தனித்து நின்றால்தான் மாரகம் செய்கின்றார்கள்.
பித்ரு தோஷம்: பித்ரு காரகரான சூரிய பகவானுடன் ராகு-கேது பகவான்கள் இணைந்திருந்தால் தந்தைக்கு தோஷமுண்டாகும். மாத்ரு காரகரான சந்திர பகவானுடன் ராகு-கேது பகவான்கள் இணைந்திருந்தால் தாய்க்கு தோஷம் உண்டாகும். மற்றபடி ஒன்பதாம் வீடு, அதன் அதிபதி நான்காம் வீடு, அதன் அதிபதி சுப பலம் பெற்று அந்தந்த வீட்டோடு சம்பந்தம் பெற்றிருந்தால் பெற்றோருக்கு தோஷம் குறையும்.