வினைகளின் நற்பயனையோ தீய பயனையோ, மறுபிறப்பில் நமது முயற்சி எதுவுமில்லாமலே விதி நம்மிடம் கொண்டு வந்து சேர்த்துவிடுகிறது.
-பஞ்சதந்திரம்
இறந்துபோனவனிடம் உயிர் இருப்பதற்கு அடையாளமான உணர்ச்சி காணப்படுவதில்லை. அது போலவே அஞ்ஞானியிடம் ஆத்மா இருக்கும் அடையாளமே செயலில் காணப்படுவதில்லை.
-விவேகசூடாமணி
பிரம்மத்திடம் ஒன்றுபட்ட யோகி ஒருவர் இருக்கிறார். அவர் தன் வீட்டில் இருந்தாலும், காட்டில் இருந்தாலும், நதிக்கரையில் இருந்தாலும் எல்லாவற்றிலும் இறைவனைக் காண்கிறார். அவர் பாலைவனத்தில் நீர் ஊற்றைக் கண்டவர் போன்று பெரிதும் உவகைக் கொள்கிறார்; ஒப்பற்ற இறைவனோடு ஒன்றுபடுகிறார்.
-ஸ்ரீ நாராயண குரு
""நான் உன்னுடையவன்'' என்று ஒருவன் ஒருமுறை என்னைச் சரணடைந்தால், எல்லாப் பிராணிகளிடத்திலிருந்தும் நான் அவனுக்கு அபயம் அளிப்பேன்!'' இது என் விரதம்.
-ஸ்ரீ ராமபிரான் (வால்மீகி ராமாயணம்)
நதி, சமுத்திரத்தில் போய்க் கலந்துவிட்டால், அதுவும் சமுத்திரமாகவே ஆகிவிடுகிறது. அது போலவே பரமாத்மாவிடம் நிலைபெற்ற சித்தமும் அந்தப் பரம்பொருளாகவே ஆகிவிடுகிறது. பரமாத்மாவிடம் சென்ற மனம் மற்ற பொருள்களை நாடிச் செல்வதில்லை.
-ப்ரபோத சுதாகரம்
சத்தியத்தை ஒரு கல்லுக்கும், பொய்யை ஒரு மண்பானைக்கும் ஒப்பிடலாம். மண்பானைமேல் கல்லை விட்டெறிந்தால் பானை உடைந்துவிடும். அது கல்லின் மேல் விழுந்தாலும் உடைந்துவிடும். எது எப்படி இருந்தாலும் கஷ்டத்திற்கு மண்பானைதான் உள்ளாகிறது.
-சீக்கிய மதம்
பாலில் நெய் இருக்கிறது. எனினும், அது புறக்கண்களுக்குப் புலப்படுவதில்லை. பாலைப் பக்குவப்படுத்திக் கடைந்தால், உரிய நேரத்தில் வெண்ணெய் திரண்டு வரும். அதுபோல் மனம் பக்குவப்பட்டுவிட்டால் அதில் இறைவன் வந்து தங்குவான்.
- பட்டினத்தார்
சில சமயங்களில் சிங்கம் தன்னை அடைத்திருக்கும் கூண்டிலிருந்து தன் சுய பலத்தினால் வெளிவருகிறது. அது போன்று, சம்சாரக் கூண்டிலிருந்து தன் சுயபலத்தினால் ஒருவன் தப்பிக்க வேண்டும்.
-யோகவாசிஷ்டம்
ஏழை விவசாயி ஒருவன், தன்னிடம் இருக்கும் சிறிய பரப்பளவு உள்ள நிலத்தை கண்ணும் கருத்துமாக இரவு பகலுமாகப் போற்றிப் பாதுகாத்து வருகிறான். அது போலவே, தசரதனும் தனது நாட்டை கண்ணும் கருத்துமாகப் போற்றிப் பாதுகாத்து வந்தான்.
-கம்ப ராமாயணம், பாலகாண்டம், அரசியற்படலம் -12
உனக்கு முன்பிருந்த பழம்பெரும் ஆச்சார்யர்களின் கொள்கைகளில் நம்பிக்கை வைத்திரு. வெறும் போகத்துடன் திருப்தியடைந்து விடாதே. யோகத்திலும் மனதைச் செலுத்து.
-ஸ்ரீ ராமாநுஜர் (பிரபன்னாமிர்தம்)