கடக ராசி சந்திர பகவானின் ஏகபோக ஆட்சி வீடாகும். திருப்பாற்கடலைக் கடைந்த பொழுதுதான் தேவலோகத்திலுள்ள வெள்ளை யானை, காமதேனு, வெண்புரவி (வெள்ளைக்குதிரை), அஷ்டலட்சுமி, தேவாமிர்தம் போன்றவைகளும் சந்திர பகவானுடன் தோன்றின. சர ராசிகள் நான்கில் கடக ராசி ஒரு சிறந்த ராசியாகும். இந்த ராசியின் முதல் 15 பாகை சந்திர ஹோரை என்றும், பிற்பகுதியான 15 பாகை சூரிய ஹோரை என்றும் கூறப்படும்.
கடக ராசியின் அதிபதியான சந்திர பகவான் பராசக்தியின் அம்சம் பெற்றவராவார். ரிஷப ராசியில் உச்சம் பெறுகிறார். (சில கிரந்தங்களில் ரிஷப ராசி சந்திர பகவானுக்கு மூலத்திரிகோண வீடாகக் கூறப்பட்டுள்ளது).
குரு பகவான் கடக ராசியில் உச்சம்: செவ்வாய் பகவான் நீச்சம்; புத, சுக்கிர, சனி, ராகு, கேது பகவான்கள் பகை பெறுகிறார்கள். சூரிய பகவான் சமத்துவம் பெறுகிறார். சந்திர பகவானுக்கு சூரியன், குரு, புதன் பகவான்கள் நண்பர்கள். செவ்வாய், சுக்கிர, சனி பகவான்கள் சம அந்தஸ்து பெறுவதுடன், ராகு}கேது பகவான்கள் இருவர் மட்டுமே பகை பெறுகின்றனர்.
சனி பகவானின் குணாதிசயங்கள்: பொதுவாக சனி பகவானின் சுப ஆதித்யத்தைப் பெற்றவர்கள் கடல் கடந்து சென்று பெரும் பொருள் சம்பாதிப்பார்கள். மிக்க தைரியமுடையவர்கள். அரசியலில் ஆதாயம் பெறுவார்கள். நிறைய புத்திர பாக்கியம் உண்டு. மகர, கும்ப ராசிகளான இரண்டு வீடுகளுக்கும் அதாவது அறுபது பாகை விஸ்தீரணத்துக்கு சனிபகவான் அதிபதியாவார். இத்தகைய அமைப்பு வேறு எந்த கிரகத்திற்கும் அமையவில்லை. அதனால் தொடர்ந்து ஐந்தாண்டுகள் தன் சொந்த வீடுகளில் கோலோச்சும் பெருமையைப் பெறுகிறார்.
துலாம் ராசியில் உச்சமும், மேஷ ராசியில் நீச்சமும் அடைகிறார். கன்னி ராசியில் சஞ்சரிக்கத் தொடங்கும் பொழுதே உச்ச ஆரோகணத்தில் (அதாவது தன் உச்ச வீட்டை நோக்கி சஞ்சரித்தல்) இருப்பதால் தொடர்ந்து ஐந்தாண்டுகளும் நன்மைகளைத் தருகிறார். கன்னி ராசி தன் நண்பரான புத பகவானின் வீடாவதும் குறிப்பிடத்தக்கது. சனி பகவானுக்கு உகந்த தானியம் எள்ளாகும்.
"எந்த ஒரு விஷயத்திற்கும் முதலில் எள்ளை கொண்டு போகக் கூடாது; உளுந்தை கொண்டு போவதுதான் நல்லது' என்று கம்ப ராமாயணத்தில் கம்ப நாட்டாழ்வார் கூறியுள்ளார்.
அதேபோல் கிரகப்பிரவேசம் செய்யும் காலங்களில் பலி கொடுப்பதற்கு ஈடாக அன்னத்தில் உளுந்தைக் கலந்து எட்டு திசைகளிலும் தெளிப்பார்கள். சனிபகவானுக்கு உகந்த நட்சத்திரங்கள் பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகியவையாகும்.