குரு பகவான் ஒரு ராசியில் சராசரியாக ஒரு வருடம் சஞ்சரிப்பார். சராசரியாக வக்கிர காலம் நான்கு மாதங்கள். அதிசாரகதியாக சராசரியாக இரண்டு மாதங்கள். சுப கிரகமாவதால் லக்னத்தைத் தவிர மற்ற கேந்திரங்களில் உள்ளபோது கேந்திராதிபத்ய தோஷத்தை அடைவார்.
கேந்திரத்தில் பகை நீச்சம் பெற்றோ, அசுப கிரகங்களின் பார்வையோ, சேர்க்கையோ ஏற்பட்டால் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கி விடும். 1, 5, 9 ஆகிய திரிகோணங்களில் குருபகவான் இருப்பது நல்லது. பொதுவாக குரு தனித்து இருப்பதை விட மற்ற கிரகங்களுடன் இணைந்து இருப்பதே நல்லது. தான் எதுவும் செய்யாமல் பிற கிரகங்களைத் தூண்டிவிடும் கிரகம் குரு பகவானாவார்.
மேஷ ராசியில் செவ்வாய் பகவான்: முதல் ராசியான மேஷ ராசி சரராசியாகும். துரிதமாகச் செயல்பட்டு எதையும் நினைத்தவுடன் முடிக்க வேண்டும் என்ற திட சித்தமும், தன்னம்பிக்கையும் உடையவர்களாவார்கள். கால புருஷனுடைய முதல் ராசியாக ஆவதால் வீரர்கள், அரசர்கள், நாடாளும் தன்மை பெற்றவர்களாகவும், தைரியசாலிகளாகவும் திகழ்வார்கள்.
தன்னால் தோற்கடிக்கப்பட்டவர்களையும் நண்பர்களாக மதிக்கும் பெருந்தன்மையும் உண்டு. இது செவ்வாய் பகவானுக்கு ஆட்சி, மூலத்திரிகோண வீடு, ஆண் ராசியாகும். செவ்வாய் பகவானுக்குரிய தலம் வைத்தீஸ்வரன் கோயிலாகும்.
இந்த ராசியில் சூரிய பகவான் முந்தைய 15 பாகைகளில் பரம உச்சமடைகிறார். பிந்தைய 15 பாகைகளில் சந்திர ஹோரையின் பரிமாணமாகும். சனிபகவான் முதல் 10 பாகைகள் பரம நீச்சம். குரு பகவான் நட்பு, சந்திரன், புதன், சுக்கிர பகவான்கள் சமம் பெறுகின்றனர். ராகு}கேது பகவான்கள் பகை பெறுகின்றனர். இந்த புத்தாண்டில் செவ்வாய் பகவான் மேஷ ராசியில் மூலத்திரிகோணம் பெற்று, பஞ்சமஹா புருஷ யோகங்களில் ஒன்றான ருசக யோகத்தைப் பெறுகிறார்.
அதோடு செவ்வாய்பகவான் வர்கோத்தமத்தில் அமர்ந்திருப்பதும் பலமான அமைப்பாகும். பொதுவாக மேஷத்தில் செவ்வாய் பகவான் அமர்ந்திருந்தால் நல்ல கல்வி, செல்வம், சம்பத்து நிறைய ஏற்படும். நான்கு திசைகளிலும் புகழ் ஏற்படும். தர்ம சிந்தனை, அன்னதானம், சொர்ண தானம் (தங்கம்) அளிக்கக் கூடியவராக இருப்பார். கடைசி காலத்தில் பூர்வ ஞானம் உதயமாகி "உலகத்தில் மனிதன் பிறக்கும்பொழுது எதையும் கொண்டு வரவில்லை; கடைசியில் போகும் பொழுதும் ஒன்றையும் கொண்டு போகப் போவதில்லை' என்ற வேதாந்தக் கருத்து அவருக்குள் ஏற்பட்டுவிடும்.