இறைவன் நமக்கு அற்புதங்கள், அதிசயங்கள் செய்கிறவர். நமக்கு இறைவன் செய்யும் அற்புதங்கள் நம் பக்தியை வளர்க்கும்.
இயேசு ஆண்டவர் இப்புவியில் வாழ்ந்தபோது பல அற்புதங்களைச் செய்தார். அவ்வற்புதங்கள் மக்களுக்கு நன்மை பயத்தன.
ஒருமுறை கானான் என்ற தேசத்தில், இயேசுவும் அவர் தாயாரும் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தனர். அங்கு விருந்துக்கு வைத்திருந்த திராட்சை ரசம் காலியாயிற்று. இயேசு தம் அன்னையின் விருப்பப்படி காலியான ஆறு ஜாடிகளில் தண்ணீரை நிரப்பும்படி சொன்னார். அவ்வாறு நிரப்பப்பட்ட தண்ணீர், இயேசுவின் அற்புதத்தால் திராட்சை ரசமாக மாறியது.
இயேசு நடந்து செல்கையில், அவர் பாதையின் நடுவே ஒரு தொழுநோயாளர் முழங்காலிட்டு நின்று "உமக்கு சித்தமானால் என்னைச் சுத்தமாக்கும்!' என்றார்.
இயேசு அவரைத் தொட்டு "எனக்கு சித்தம் உண்டு! சுத்தமாகு!' என்று சொல்லி அவரது தொழுநோயை குணமாக்கினார்.
காது கேளாத, பேச முடியாத சிறுவன் ஒருவனை இயேசுவிடம் கொண்டுவந்தனர். இயேசு அவன் காதுகளில் தம் விரலை வைத்து "பேசு!' என்றார். உடனே அவன் பேசினான், நன்றாக காதும் கேட்டது.
முடக்கு வாத நோயினால் பத்து ஆண்டுகள் பாதிக்கப்பட்டு, "பெதஸ்தா' என்ற குளக்கரையில் படுத்திருந்தவனிடம் இயேசு நேரில் சென்றார். "நீ குணமாக விரும்புகிறாயா?' என்று கேட்டார். "ஆமாம்!' என்றார்.
"உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட!' என்று கூறினார். அதன்படியே அவன் நடந்து சென்றான். சீடர் பேதுருவின் மாமியார் காய்ச்சல் வந்து படுக்கையில் கிடந்தார். இயேசு அவரைத் தொட்டு காய்ச்சலைப் போக்கினார். 18 ஆண்டுகளாக கூன் விழுந்திருந்த ஒருவரின் கூனை நிமிர்த்தினார்.
பாஸ்கா பண்டிகையின்போது இயேசு மூன்று நாள்கள் தங்கியிருந்தார்.
அங்கிருந்த ஆயிரக்கணக்கானோருக்கு உணவில்லை. அச்சமயம், இயேசுவிடம் ஒரு சிறுவன் அளித்த ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் எடுத்து, எல்லோருக்கும் பங்கிட்டுக் கொடுக்கும்படி செய்தார்.'
அப்பமும், மீனும் வைத்திருந்த சிறுவன் மனப்பூர்வமாகக் கர்த்தருக்கென்று கொடுத்தான். அவனுடைய உள்ளத்தில் கொடுக்க வேண்டு
மென்ற எண்ணத்தைத் தேவன் அளித்திருந்தார்.
அந்தச் சிறுவனின் செயலால் அநேகர் பயனடைந்தனர். நம்மிடத்திலும் இருக்கிற திறமைகளைக் கொண்டு இயேசு பெரிய காரியங்களைச் செய்வார். அதற்கு நாம் உண்மையுள்ளவர்களாக, அவருடைய சித்தத்தின்படி செயல்பட, நம்மை நாமே விட்டுக்கொடுக்க ஆயத்தமாயிருக்க வேண்டும். பக்தியுடன் வாழ்வோம்! இறையருள் நம்மோடு!