எந்த ஒரு பாவத்திலும் சுபக்கிரகங்கள் இருந்தால் நன்மை பயக்கும். அந்த சுப கிரகங்கள் கேந்திர வீடுகளுக்கு (1, 4, 7, 10) அதிபதியாக வந்தால் கேந்திராதிபத்ய தோஷம் உண்டாகும் என்பதை அனைவரும் அறிந்ததே.
எந்த ஒரு பாவத்திலும் அசுபக் கிரகங்கள் குறிப்பாக கேந்திர வீடுகளில் அமர்ந்திருந்தால், அந்த வீடுகளுக்கு சிறப்பான பலம் உண்டாகும் என்றும் கூறுகிறோம். 7-ஆம் வீட்டில் சனி பகவானும், பத்தாம் வீட்டில் சூரிய, செவ்வாய் பகவான்களும் திக்பலம் பெறுவார்கள் என்றும் உள்ளது.
ஒரு பாவத்திற்கு முன் கட்டத்திலும், பின் கட்டத்திலும் அதாவது 12-ஆம் வீட்டிலும், இரண்டாம் வீட்டிலும் சுபக் கிரகங்கள் அமர்ந்திருந்தால், அந்த பாவத்திற்கு "சுப கர்த்தாரி யோகம்' உண்டாகும். இந்த இரண்டு சுபக் கிரகங்களும் அந்த பாவத்திற்கு அரணாக அமைந்து பாதுகாக்கும். அதோடு அந்த பாவத்தினால் கிடைக்கக்கூடிய பலன்களை இரண்டு மடங்காக கூட்டிக் கொடுக்க உதவிகரமாக இருப்பார்கள்.
அதேபோல, ஒரு பாவத்திற்கு இரண்டு பக்கங்களிலும் அசுபக் கிரகங்கள் அமைந்து அந்த கிரகங்கள் லக்னத்தை நெருங்குவதால் (நொறுங்கி / உடைந்து) அந்த பாவத்திற்கு நலிவு உண்டாகிறது; எப்படி ஒரு கொட்டைப்பாக்கை ஒரு கிடுக்கியைப் பிடித்து அழுத்தினால், அந்தப் பாக்கு இரு பக்கத்திலும் அழுத்தப்பட்டு, உடைந்து விடுகிறதோ அதுபோலவே, அந்த பாவம் நசுக்கப்படுகிறது.
இதனால் அந்த பாவத்திற்கு கிடைக்க வேண்டிய நற்பலன்கள் கிடைக்காமல் போய்விடுகிறது. இதுவே "பாப கர்த்தாரி யோகம்' ஆகும். உதாரணமாக, 12-ஆம் வீட்டில் ராகு / கேது பகவான்களில் ஒருவர் இருந்தால் பாப கர்த்தாரி யோகத்தின் வீரியம் குறைந்து விடுகிறது. எப்படியெனில் ராகு / கேது பகவான்கள் பின்னோக்கி (வக்கிரம்) சஞ்சரிப்பார்கள்.