மயிலாடுதுறை - திருவாரூர் இடையே பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது "திலதர்ப்பணபுரி'. இங்குள்ள ஆதிவிநாயகர் தும்பிக்கை இல்லாமல்
காட்சியளிக்கிறார்!
மருதமலையில் ஆலமரம் முதலான ஐந்து விருட்சங்கள் பின்னிப் பிணைந்திருக்கும் இடத்தருகில் அருள் பாலிக்கிறார் பஞ்சவிருட்ச கணபதி. பஞ்ச விருட்சத்தின் அடியில், முனிவர்கள் அருவமாகத் தவம் செய்வதாக
ஐதீகம்!
தாமரை மலரில் அமர்ந்த நிலையில், வழக்கத்துக்கு மாறாக கையில் கரும்புடன் காட்சி தருகிறார் திருப்பரங்குன்றம் கற்பக விநாயகர்.
சென்னை - மீஞ்சூருக்கு அருகில் உள்ளது செட்டிப்பாளையம். இங்குள்ள விநாயகர் கோயிலில், வலப்புறம் சாய்ந்த நிலையில் அருளும் பிள்ளையாரை தரிசிக்கலாம். இவரை "வலஞ்சை விநாயகர்' என்றழைக்கின்றனர்.
அரியலூர் - ஜெயங்கொண்டம் மார்க்கத்தில் சுமார் 10 கி.மீ. தூரத்தில் உள்ள வைரவனீஸ்வரர் ஆலயத்தில், அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரப் பயிற்சியளித்த வில்லேந்திய விநாயகரை தரிசிக்கலாம்.
ஐங்கரனான விநாயகர், மூன்று கரத்தோனாக எழுந்தருளும் தலம் பிள்ளையார்பட்டி. இங்கே, விநாயகருக்கு வெள்ளை ஆடை மட்டுமே அணிவிக்கின்றனர்.
திருவையாறு கோயிலில் அருள்கிறார் ஓலமிட்ட விநாயகர். ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதை உணர்த்த நள்ளிரவில் ஓலமிட்டு, ஊர்மக்களைக் காப்பாற்றியதால் இவருக்கு இந்தத் திருநாமம் ஏற்பட்டது! இதே தலத்தில் லிங்கத்தின் ஆவுடையார் மீது அமர்ந்தருளும் ஆவுடைப்பிள்ளையாரையும் தரிசிக்கலாம்.
மதுரையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் திருபுவனம் கோட்டை எனும் இடத்தில் "விநாயக கோரக்கர்' அருள்கிறார். நோய்களைத் தீர்ப்பதிலும், சனி தோஷம் தீர்ப்பதிலும் விநாயகர் வடிவில் உள்ள கோரக்க சித்தர் அருள்கிறார்.
நாகப்பட்டினம் செண்பகபுரியில் உள்ளது ஆதிகும்பேஸ்வர சுயம்பு விநாயகர் ஆலயம். இவர் சந்நிதி கோஷ்டங்களில் மும்மூர்த்திகளும் அருள்வது வித்தியாசமான அமைப்பு.
தூத்துக்குடி, ஆறுமுக மங்கலத்தில் ஆயிரெத்தெண் விநாயகர் அருள்கிறார். இத்தலத்தில் சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் பஞ்ச
முக ஹேரம்ப கணபதி, நடராஜப்பெருமானுடன் திருவீதிவுலா வருகிறார்.
கோயம்புத்தூர் மத்தம்பாளையத்தில் காரண விநாயகரை தரிசிக்கலாம். இக்கோயிலில் விநாயகர் அருகில் நந்தியம்பெருமான் வீற்றிருப்பது தனிச் சிறப்பு.
சிதம்பரத்திலிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள திருநாரையூரில் அருள்கிறார் பொள்ளாப் பிள்ளையார். பன்னிரு திருமுறைகளைத் தொகுக்க உதவிய நம்பியாண்டார் நம்பிக்கு அருள்புரிந்த விநாயகர் இவர். உளியால் செதுக்கப்படாத (பொள்ளா) பிள்ளையார்.
தஞ்சாவூர், கணபதி அக்ரஹாரத்தில் மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவதில்லை. விநாயகர் கோயிலிலேயே வந்து கொண்டாடுகின்றனர்.
கும்பகோணம், ஆடுதுறைக்கு அருகேயுள்ள மருத்துவக் குடியில் தேள் போன்ற வடிவமைப்பில் "விருச்சிகப் பிள்ளையார்' அருள்கிறார்.
திருச்சிக்கு அருகேயுள்ள பிச்சாண்டவர் கோயிலில் சிம்ம வாகனத்தின் மீது பஞ்சமுக விநாயகர் ஐந்தடி உயரத்தில் அருள் புரிகிறார்.