ரமலான் மாதம் முப்பது நாள்கள் தப்பாது நோன்பு நோற்று ஒப்பிலா இறைவனின் ஒப்பற்ற அருளை நேரடியாக பெறும் நிறைந்த மனத்தோடு நிறைந்து நின்று பிறந்த குழந்தைகள் போல பாவம் அற்றவர்களாய் பெரும் மகிழ்ச்சி அடையும் கிடைத்தற்கரிய கிருபை பொழியும் பெருநாளே ஈதுல்பித்ர் என்னும் மாண்புடைய நோன்பு பெருநாள். நடப்பாண்டில் இந்த திருநாள் 3.5. 2022 -இல் வருகிறது.
பசியறியாது புசித்து வாழ்வோர் பசியோடு நோற்ற நோன்பில் அறியாது நிகழ்ந்த குறைகளைக் களைந்து நிறைவான இறையருளைப் பெற பெருநாள் பிறை கண்டதிலிருந்து தொழுகைக்குப் புறப்படு முன் பித்ர் தர்மத்தை வழங்க வேண்டும்.
பித்ர் என்பது யார் எந்த நாட்டில் எந்தப் பகுதியில் வாழ்கிறார்களோ அந்த நாட்டில் அந்தப் பகுதியில் பிரதானமாக உண்ணும் உணவு தானியத்தை எடுத்துகாட்டாக நம் தமிழ்நாட்டில் அரிசியைக் கொடுக்கும் தர்மம்.
ஒரு குடும்பத் தலைவர் அவரின் பொறுப்பில் உள்ள அன்று பிறந்த குழந்தை முதல் பெரியவர் வரை அத்தனை குடும்ப உறுப்பினர்களுக்கும் ஒருவருக்கு இரண்டு கிலோ வீதம் கணக்கிட்டு ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும்.
ஜகாத் என்னும் ஏழை வரி கட்டாய கடமை ஆக்கப்படுவதற்கு முன்னரே பித்ரா தர்மம் கடைபிடிக்கப்பட்டு இன்று வரை நடைமுறையில் உள்ளது.
பித்ரா தர்மம் பற்றிய தகவலைக் கைஸிப்னு ஸஃது ப்னு உபாதா ( ரலி) அறிவிக்கிறார். நூல் - நஸஈ
இந்த பித்ரா தர்மம் இருப்போர் இல்லாதோருக்குக் கொடுத்து உதவி எல்லோரும் சமமாய் மகிழ்வாய் ஒன்றாய் நின்று பெருநாள் தொழுகையை நிறைவேற்றி சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் நிலைநிறுத்த வேண்டுகிறது. தூண்டுகிறது. இதை இந் நந்நாளில் கடைபிடிப்பதோடு நிறுத்திவிடாது எந்நாளும் பேண வேண்டும். இருப்போர் இல்லாதோருக்கு உதவி அவர்களும் தொழில் வணிகம் அலுவல்கள் புரிந்து எல்லாரும் ஏற்றமாய் வாழ உறுதி ஏற்போம்.