தமிழ் மாதங்களில் புனிதமானதும் தெய்விகச் சிறப்பு வாய்ந்த மாதமாகவும் "மார்கழி' மாதம் விளங்குகிறது.
திருப்பாவை, திவ்விய பிரபந்தப் பாசுரங்களால் திருமாலை வைணவர்கள் போற்றி வைகுண்ட ஏகாதசி திருவிழாவைக் கொண்டாடுகின்றனர். மாணிக்கவாசகப் பெருமான் அருளிய திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சிப் பாடல்களை சைவர்கள் பாடித் தொழுது திருவாதிரை நாளில் "ஆருத்ரா தரிசனம்" கொண்டாடுகின்றனர்.
பகவத் கீதையில் கண்ணன் மாதங்களில் "மார்கழியாகவும்', நாள்களில் திருவாதிரையாகவும் விளங்குகின்றேன் என எடுத்துக் கூறுவதைக் காணலாம்.
பாவை நோன்பு: விரும்பிய கணவனை அடையவும் கன்னிப் பெண்கள் விடியற்காலையில் நீராடி இறைவனை வழிபடுவார்கள். திருப்பாவை பாடல், மார்கழி மாத பாவை நோன்பின் சிறப்பைக் கூறுகிறது.
ஆண்டாள் பக்தி: திருப்பாவை பாடியவர் ஆண்டாள். ஆடிப்பூரத்தில் அவதரித்த கோதை திருமாலையே கணவர் என்பதில் உறுதியாக இருந்தார். பெருமாளுக்காகக் பெரியாழ்வார் தொடுத்து வைத்த மாலையை அணிந்து மகிழ்கிறாள். ஆண்டாள் சூடி மகிழ்ந்த மாலையே தனக்கு விருப்பம் என இறைவன் கூற, "சூடிக்கொடுத்த சுடர்க்கொடி' என்றும் இறைவனை தனது அன்பால் பக்தியால் ஆட்கொண்டதால் ஆண்டாள் எனவும் அழைக்கப்படுகிறாள்.
திருவரங்கம் ஓவியம் : திருவில்லிபுத்தூரில் அவதரித்த ஆண்டாள் திருவரங்கத்தில் பள்ளிகொண்டருளும் அரங்கனுடன் ஒன்றிய வரலாறு அறிந்ததாகும். திருவரங்கம் கோயிலில் இராமானுசர் சந்நிதியில் ஆண்டாளின் வரலாறு அழகிய ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளதைக் காணலாம்.
திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி: திருவரங்கம் கோயிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசித் திருவிழா சிறப்பு வாய்ந்த திருவிழாவாகும். இத்திருவிழா "திருமொழித் திருநாள்' (பகல்பத்து இராப்பத்து) என்றபடி அழைக்கப்படுகிறது. இந்நாட்களில் ஆழ்வார்கள் அருளிய பாசுரங்கள் அரையர்களால் அபிநயத்துடன் பாடப்பெறுகிறது. விழாவாக திருவரங்கத்துப் பெருமாளைப் போற்றி ஆழ்வார்களால் 247 பாசுரங்கள் அருளப் பெற்றுள்ளன. அதிகமான பாடல்களால் போற்றி மகிழ்ந்தவர் திருமங்கை ஆழ்வார். இவர் அருளிய "திருநெடுந்தாண்டகம்' வைகுண்ட ஏகாதசித் திருவிழாவில் முதல்நாள் அன்று அருளப்படுகின்றது. "அமலன் ஆதிபிரான்' என்று அரங்கன் அழகைப் போற்றிய திருப்பாணாழ்வார் பாசுரம் 5-ஆம் நாள் அருளப்படுகிறது. வைணவக் கோயில்களில் திருப்பாவை, திருவாய்மொழி, திருநெடுந்தாண்டகம், திருப்பள்ளியெழுச்சி போன்ற பாசுரங்கள் தொன்றுதொட்டு பாடப்பட்டு வருவதையும் அதற்கு நிவந்தங்கள் அளித்தது பற்றியும் கல்வெட்டுகள் எடுத்துக் கூறுகின்றன.
திருவரங்கம், திருமால்புரம், உத்திரமேரூர், எண்ணாயிரம் போன்ற பல கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகளின் மூலம் திவ்விய பிரபந்தங்கள் பாடப்பட்டு வந்ததை நம்மால் அறிய முடிகிறது.
ஆதிரையான்: சிவனுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை ஆகும். "ஆதிரை நன்னாளான்', "ஆதிரைநாள் உகந்தார்' எனப் போற்றுகின்றனர் அடியார்கள். திருவாதிரைத் திருநாளில் சிவனை வழிபாடு செய்வதையும் சிவனடியார்களுக்கு அமுது அளித்தலையும் கடமையாகக் கொண்டிருந்தனர் எனப் பெரியபுராணப் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது.
திருவாதிரைத் திருவிழா: திருவாதிரை விழா மிகவும் சிறப்பானது. ஆடவல்லான் ஆகிய நடராசப் பெருமானுக்குச் சிறப்பான அபிஷேக வழிபாடுகள் நடைபெறுகின்றன. "கனகசபை' எனப் போற்றப்படும் சிதம்பரத்தில் இறைவன் தாருகாவன முனிவர்களின் கர்வத்தை அடக்கி ஆடிய நடனம் ஆனந்த நடனம் ஆகும். ஆனந்த நடனத்தை தில்லையில் ஆதிரை நன்னாளில் சிவபெருமான் ஆடியதாகக் கூறப்படுகிறது. இதை "ஆருத்ரா தரிசனம்' என அழைக்கிறோம்.
மயிலாப்பூர் கோயிலில் நடைபெறும் "ஆதிரை நாள் விழா' பற்றிய சிறப்பினை ஞானசம்பந்தர் பதிகம் மூலமாகவும், திருவாரூர் திருத்தல ஆதிரை நாள் விழா பற்றி நாவுக்கரசர் பெருமான் பதிகம் மூலமாகவும் அறிகிறோம்.
திருமழபாடி, திருவாரூர், திருக்கோடிக்காவல், திருப்பனந்தாள், பழையாறை, சோழமாதேவி, திருவிடைவாசல், திருவொற்றியூர் போன்ற கோயில்களில் திருவாதிரை விழா சிறப்பாக நடைபெற்றது பற்றிய செய்திகள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.
மார்கழி மாதத்தில் மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் பாடுவதற்குத் திருவொற்றியூர், மதுரை, நான்குநேரி, திருக்கோவிலூர், வழுவூர் போன்ற கோயில்களில் தானம் அளித்ததாகவும் கல்வெட்டுகளில் கூறப்படுகின்றன.
-கி. ஸ்ரீதரன்,
(தொல்லியல் துறை - பணி நிறைவு).