சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்குமதிபதியான புத பகவான் அயன சயன மோட்ச ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் கேந்திராதிபத்ய தோஷம், பாதகாதிபத்ய தோஷம், மாரகாதிபத்ய தோஷம் நீங்கப் பெற்று ராகு பகவானின் சாரத்தில் (சதய நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியில் நீச்சம் பெறுகிறார்.
உலோகங்களில் திரவ வடிவத்தில் இருக்கும் பாதரசம் புத பகவானின் உலோகமாகும்.
புத பகவானுக்குரிய நிறம் பச்சை நிறமாகும். அதோடு மாதுல (மாமன்) காரகர், கல்விகாரகர் என்றும் அழைக்கிறோம்.
புத்தக அறிவை விட அனுபவ அறிவு சிறப்பாக வேலை செய்யும் என்பது உண்மை. சந்திர கேந்திரத்தில் அமர்ந்திருக்கும் புத பகவான் எழுத்து, கலை, இலக்கியம், ஜோதிடம் போன்றவைகளில் தலைசிறந்து இருக்கச் செய்வார். சொல்வாக்கு, செல்வாக்காக அமைந்து பெரும் பலனைத் தரும்.
சூரிய பகவானின் சிறப்பு: ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கு அதிபதியான சூரிய பகவான் லக்னத்தில் குரு பகவானின் சாரத்தில் (பூரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார்.
சூரிய பகவான் பலம் பெற்று அமர்ந்திருப்பதால் ஆத்ம பலம் கூடும். பெரிய மனிதர்களின் தொடர்பும், உதவியும் தாராளமாகக் கிடைக்கும். அரசாங்க விவகாரங்கள் அனுகூலமாக முடிந்துவிடும். தந்தைவழிச் சொத்துக்கள் கை வந்து சேரும்.
உடலாரோக்கியம் திருப்திகரமாகக் காணப்படும். ஆறாம் வீடு சர்வீஸ் வீடு என்பதால் உத்தியோகத்தில் அரிய பெரிய பதவிகளை எட்டிப்பிடித்து விடலாம். விரைவில் முன்னேற வேண்டும் என்கிற உத்வேகத்தில் இவர்கள் ஆற்றிவரும் தொண்டு மற்றவர்களை பிரமிக்கச் செய்யும் வகையில் அமையும்.
எந்த விஷயத்திலும் முன்வைத்த காலை பின் வைக்காமல் காரியமாற்றும் திறன் உண்டாகும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று உயர்வடையக் கூடிய யோகங்களும் உண்டாகும்.
லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும், அயன சயன மோட்ச ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் செவ்வாய் பகவானின் சாரத்தில் (அவிட்டம் நட்சத்திரம்) ஆட்சி பெற்றமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார்.
3, 6, 11-ஆம் வீடுகளில் சனி பகவான் சஞ்சரித்தால் பிரபல ராஜ யோகத்தைக் கொடுப்பார் என்பது ஜோதிட விதி. உடல் உழைப்பிற்குக் காரகரான சனி பகவான், விவசாயம், இரும்பு, நெசவுத் துறைகளுக்கும் காரகத்துவம் ஏற்றுள்ளார்.
ராகு பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் சூரிய பகவானின் சாரத்தில் (கிருத்திகை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார். கேது பகவான் அஷ்டம, ஆயுள், புதையல் ஸ்தானமான எட்டாம் வீட்டில் குரு பகவானின் சாரத்தில் (விசாகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார்.
சூரியன் முதல் சனி பகவான் வரையுள்ள ஏழு கிரகங்கள் வலமிருந்து இடமாக கிரகமண்டலத்தை பிரதட்சணமாக சுற்றி வருகின்றன. ராகு, கேது பகவான்கள் அப்பிரதட்சணமாக சுற்றி வருகின்றன. ராகு, கேது பகவான்களுக்கு உருவம் கிடையாது என்றும், அவைகள் நிழல் கிரகங்கள் என்றும் சொல்லப்படுகின்றன.
இவர்களுக்கு என்று சொந்த வீடு (ஆட்சி வீடு) கிடையாது. எந்த வீட்டில் இவர்கள் சஞ்சரிக்கிறார்களோ அந்த இல்லத்து அதிபதிகளைப் போல் பலன் தருவார்கள் என்பது சாஸ்திர விதி.
சுபர் இல்லத்தில் சஞ்சரிக்கும் பொழுது சுப பலனும், அசுபர் இல்லத்தில் சஞ்சரிக்கும் பொழுது அசுப பலனும் தருவார்கள் என்பது ஜோதிட விதி ஆகும். கூட்டு கிரக அமைப்பில் ராகு பகவானும், அவரை விட கேது பகவானும் வலுவுள்ளவர்களாவார்கள். மற்ற கிரகங்களுக்கு இருப்பதுபோல் ஹோரை என்ற அமைப்பும் இல்லை; அஷ்ட வர்க்கத்தில் பரல்கள் தரும் அமைப்புமில்லை.
ராகு பகவான் இரண்டாம் வீட்டிலும், கேது பகவான் எட்டாம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் கருத்தோடு வாழக் கூடிய அமைப்பு உண்டாகும். ஏட்டிக்குப் போட்டி என்கிற இடர்பாடு இராது. அனைத்திலும் முழுமையான வெற்றியுண்டாகும். குடும்பத்தில் நிர்வாகத்திலும் புதிய மாற்றங்கள் உண்டாகும். எதிரிகளும், எதிர்ப்பு சக்திகளும் இராது. உடல் ஆரோக்கியத்திலிருந்த சோர்வு, இயலாமை போன்றவை யாவும் அடியோடு நீங்கி சகஜ நிலை உருவாகும். போட்டி பொறாமைகள் விலகி சமரசமாகக் கூடிய சூழ்நிலையும் உருவாகும்.
பகைவர்களும் கூட நண்பர்களாகும் நிலைமையும், உடல்நலம் நோய் நொடியின்றி நல்ல ஆரோக்கியம் பெற்றும், நீண்டகால ஆசைகள் பூர்த்தியாகும் வகையில் எண்ணிய எண்ணங்கள் திண்ணமாய் நிறைவேறும் நிலைமையோடு, தயக்கம், சலனம், மயக்கமின்றி துணிகரமாகச் செயல்படவும் செய்வார். நீண்டதூரப் பயணங்களும் கூடிவரும்.