இயேசு சொன்ன உவமைக் கதை: ஒரு தந்தைக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். அவர்களில் இளையவன் தகப்பனிடம் கேட்டான். ""அப்பா! சொத்தில் என் பாகத்தை எனக்குத் தரவேண்டும்'' என்றான்.
அப்படியே தந்தை அவர்களுக்குத் தன் சொத்துக்களைப் பங்கிட்டுக் கொடுத்தான். இளையமகன் நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு, தூரதேசத்துக்குப் புறப்பட்டுப்போனான். அங்கே தீய வழிகளில் செலவுகள் செய்து, தன் ஆஸ்தியையெல்லாம் அழித்தான்.
நண்பர்கள் விலகிப்போனார்கள். அந்தத் தேசத்திலே கொடிய பஞ்சம் உண்டாயிற்று. இளையமகனுக்கு சாப்பிட வழியில்லை. அப்பொழுது அவன், அந்தத் தேசத்தின் குடியானவனிடத்தில் வேலைக்குச் சேர்ந்தான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான். பன்றிகள் தின்னும் தவிட்டைக் கூட அவனுக்கு உண்ணக் கொடுக்கவில்லை.
இளையமகன் சிந்தித்தான். "என் தகப்பன் தன்னுடைய கூலிக்காரர்களுக்கு வயிறு நிறைய சாப்பாடு போடுவாரே! இங்கே நானோ பசியினால் சாகிறேன். இந்தக் கொடுமையை அனுபவிப்பதைவிட, என் தகப்பனிடம் சென்று, அவருடைய கூலிக்காரர்களில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும்படி மன்றாடுவேன்!' என்று சொல்லிவிட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான்.
அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டுகொண்டு, மனம் உருகி, கண்ணீர் கசிய ஓடி வந்து, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டான். இளையமகன் மனம் வருந்தி, "இனிமேல் உம்முடைய மகன் என்று சொல்வதற்கு எனக்கு அருகதை இல்லை. நான் ஓர் ஊழியனாக இருக்கிறேன்!' என்று சொன்னான்.
அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரர்களை நோக்கி, "நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்துங்கள். இவன் கைக்கு மோதிரத்தையும், கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள். நாம் விருந்து உண்டு, சந்தோஷமாயிருப்போம்!' என்றான்.
இதனால் கோபமடைந்த மூத்த மகனிடம், "உன் சகோதரனாகிய இவன் மரித்தான்; திரும்பவும் உயிர்த்தான். காணாமற்போனவன், திரும்பவும் கிடைத்தான். அதனாலே, நாம் மகிழ்ச்சியாயிருக்க வேண்டும்! பாவம் செய்தவன் திருந்தி வரும்போது, களிப்படைய வேண்டுமேயன்றி கசப்படையலாகாது!' என்றான்.
மனிதனின் கடந்தகால வாழ்க்கையைப் பற்றி எண்ணாமல், மனம் திரும்புகிற பாவியினிமித்தம் பரலோகத்தில் சந்தோஷமுண்டாகும் (லூக்கா 15:11}32).
இயேசு கிறிஸ்து இந்த உவமையில், கெட்டுப்போன ஒருவன் மனம் திருந்தி, பரலோகப் பிதாவிடம் வருவதைக் குறிப்பிடுகிறார்.
-முனைவர் தே.பால் பிரேம்குமார்