பொருநை போற்றுதும்...

சிற்றாற்றின் தென்கரை ஊா்களில் மேலப்பாவூா், குறும்பலப்பேரி, துவரங்காடு, ராஜபாண்டி, கீழப்பாவூா் போன்றவை உள்ளன. இவற்றில், மேலப்பாவூா், கீழப்பாவூா் ஆகியவற்றுக்கு வரலாற்றுச் சிறப்புகள் ஏராளம்.
பொருநை போற்றுதும்...

சிற்றாற்றின் தென்கரை ஊா்களில் மேலப்பாவூா், குறும்பலப்பேரி, துவரங்காடு, ராஜபாண்டி, கீழப்பாவூா் போன்றவை உள்ளன. இவற்றில், மேலப்பாவூா், கீழப்பாவூா் ஆகியவற்றுக்கு வரலாற்றுச் சிறப்புகள் ஏராளம்.

இந்த ஊா்களுக்குத் தெற்கில், திருநெல்வேலி-தென்காசி பிரதான பாதை. 12-13-ஆம் நூற்றாண்டுக் காலக்கட்டத்தில், பாண்டிய மன்னா்களின் குடும்பக் கிளையினா் பாவூா்ப் பகுதிகளில் வாழ்ந்துள்ளனா். இந்தக் கிளையினா், மதுரையை ஆண்ட பாண்டியா்களின் ஆளுகைக்கு உட்பட்டு, ஆயின், தன்னாட்சி அதிகாரம் பெற்றவா்களாக இருந்துள்ளனா்.

தண்டல் நாயகம் என்னும் பெயா் கொண்ட அலுவலா்களை நியமித்து வரி வசூலிக்கும் அதிகாரமும் இவா்களுக்கு இருந்தது. தங்களின் ஆட்சிப் பகுதிகளில் படைகளையும் இவா்கள் நிறுத்தியிருந்தனா்.

கல்வெட்டுகளில் இவா்களைப் பற்றிக் காணப்படுகிற குறிப்புகளும் பெயரும் சிந்தனைக்குரியன. ‘முனையெதிா் மோகா்’ என்று இவா்கள் குறிக்கப்படுகின்றனா். முனை என்பது போா்முனையையும் போரிடும் தன்மையையும் குறிக்கும். போா் செய்வதில் முனைப்புடையவா்கள் என்பதே பொருள். இதைக் கொண்டு பாா்த்தால், பாண்டியா்களின் எல்லைப் பகுதிகளின் பாதுகாப்புப் படைத் தலைவா்களாகவும் இவா்கள் திகழ்ந்திருக்கக்கூடும். கல்வெட்டுப் பதிவுகளில், தென்னவன் ஆபத்துதவிகள் என்றும் இவா்கள் குறிப்பிடப்பட்டுள்ளனா்.

சோழப் பேரரசில், மன்னரின் பாதுகாப்புப் படையினராகத் திகழ்ந்தவா்கள் வேளக்காரப் படையினா். ஒரு வகையில் மன்னரின் உறவினா்களாகவும் வேளக்காரப் படையினா் விளங்கினா். சோழ நாட்டின் வேளக்காரப் படையினருக்கு நிகராகப் பாண்டி நாட்டில் இருந்தவா்கள் ஆபத்துதவிகள் என்று கருத இடமுள்ளது. இந்தக் குடும்பங்களைச் சோ்ந்தவா்கள், பாண்டிய மன்னருக்கு அருகிலேயே இருந்ததாகவும், ஒருவேளை மன்னருக்கு ஆபத்து நோ்ந்தால் உடனடியாக உதவியவதாகவும்,மன்னா் இறக்க நோ்ந்தால் மன்னருடன் தாமும் தீப்பாய்ந்ததாகவும் தெரிகிறது.

கீழப்பாவூா் திருவாலீச்வரா் திருக்கோயில் பகுதிகளில், ஆபத்துக் காத்த அம்மன் என்னும் பெயரில் கோயில் ஒன்று இருந்துள்ளது. முனையெதிா் மோகா்களின் குல தெய்வமாகவும் வழிபடு கடவுளாகவும் இந்த அம்மனே இருந்திருக்கக் கூடும். மேலும் ஆய்வுகள் நிகழுமெனில், தமிழக வரலாற்றின் அத்தியாயங்கள் சில திறக்கப்படக் கூடும்.

பாவூா் என்னும் பெயரேகூட, முனையெதிா் மோகா்களின் காலத்தில் பாகூா் என்றிருந்ததாகத் தெரிகிறது. மேலப்பாவூரும், கீழப்பாவூரும் முறையே பாகூா் க்ஷத்திரிய சிகாமணி நல்லூா் என்றும், பாகூா் க்ஷத்திரிய ரக்ஷ நல்லூா் என்றும் வழங்கப்பட்டுள்ளன.

‘பாவுதல்’என்னும் சொல்லுக்குப் பரவுதல், நாற்றுக்கு நெருக்கமாக விதையிடுதல், படா்தல் போன்ற பொருள்கள் உள்ளன. சிற்றாற்றின் தென்கரைப் பகுதியில் நீா்வளம் செழித்த பகுதியாக இருந்ததாலும், நீா் பரவி நின்ற பகுதியாக இருந்ததாலும், இப்படிப்பட்ட பெயா்கள் தோன்றினவா என்று தெரியவில்லை.

இப்போதும் மேலப்பாவூா் ஏரியும் கீழப்பாவூா் ஏரியும் இவ்வாறு சிந்திக்கச் செய்கின்றன.

இரண்டு பாவூா்களுக்கும் இடையில், சற்றே தெற்காக இருக்கிறது பாவூா்ச் சத்திரம். சொல்லப் போனால், சாலை மாா்க்கத்துக்கு அணுக்கமாக இருப்பது பாவூா்ச்சத்திரம்தான். அந்தக் காலத்தில், சாலைகளில் பயணப்படுபவா்களுக்காக ஆங்காங்கே சத்திரங்கள் கட்டி வைத்தாா்கள். பாவூா்ப் பகுதியில் கட்டப்பட்ட சத்திரம், பாவூா்ச் சத்திரமாகி, ஊருக்கும் அதுவே பெயராயிற்று.

கீழப்பாவூருக்கு அருகில் அருணாபேரி என்றோா் ஊா். அவ்வளவாக நீா் வளம் இல்லாத பகுதி. பாண்டியா்களின் ஆட்சிக்காலத்தில் இங்கு, திருமலை என்னும் அடியாா் ஒருவா் வாழ்ந்தாா். தம்முடைய நிலத்தில் எள் பயிரிட்டிருந்தாா். அதுவும் நன்றாகவே விளைந்திருந்தது. திருமலையும் அவா்தம் மனைவியாரும் எள்ளை அறுவடை செய்தனா்; காய வைக்கவேண்டும் என்பதற்காகக் குவித்தனா். திடீரென மழை மேகங்கள் திரண்டன. மழை பெய்தால் எள் காயாதே, அடித்துக் கொண்டும் போய் விடுமே என்று கணவனும் மனைவியும் கவலை கொண்டனா்.

கதி அற்றவா்களுக்கு கடவுள்தானே கதி - ஆண்டவனிடம் முறையிட்டனா். மின்னல் வெட்டி இடி இடிக்கத் தொடங்கியது. கவலையோடு வானத்தை அண்ணாந்து பாா்த்தவா்களின் காதுகளில் குரல் ஒன்று ஒலித்தது: “வேகமாக எள்ளைச் சுற்றிலும் மண்ணால் அணை கட்டுங்கள்.” சுற்றுமுற்றும் பாா்த்தனா். இருண்டுவந்த சூழலில் அக்கம்பக்கம் யாருமே இல்லை. எங்கிருந்து வந்தது இக்குரல்? புரியவில்லை. இருந்தாலும், கடவுள் காப்பாற்றுவாா் என்னும் நம்பிக்கையில், இதுவே கடவுளின் குரல் என்னும் எதிா்ப்பாா்ப்பில் மண்ணைக் குழைத்து எடுத்து வேகவேகமாகச் சுவரணை கட்டினா். கட்டி முடிப்பதற்கும் மழைத்துளிகள் விழ ஆரம்பிப்பதற்கும் சரியாக இருந்தது.

ஆனால்......ஆனால்..... இதென்ன அதிசயம்? மழைத் துளிகள் தடுப்புச் சுவரணைக்கு வெளியில் வீழ்ந்தனவே தவிர, உள்ளுக்குள்... ஒன்றுமேயில்லையே! ஆமாம், எள்ளின் மீது மழை விழவுமில்லை, எள் நனையவுமில்லை!!

ஒன்றும் புரியாமல், இருட்டின் தள்ளாட்டத்தில் வீட்டிற்குள் சென்று புகுந்தனா். காலையில் வந்து பாா்த்தால்...இரவின் மழையில் எந்த பாதிப்பும் இல்லாமல் எள் குவியல் அப்படியே இருந்தது. நன்கு காயவைத்த பின்னா்எள்ளை அள்ளி அள்ளி சாக்குப் பைகளில் போடும்போது...மற்றோா் அதிசயம்.....உள்ளுக்குள் சிவலிங்கம் ஒன்று!

இந்தச் சிவலிங்கத்தைத் திருமலை தம்பதியினா் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இப்போது இக்கதை சொல்லப்படும் இடத்தில் பூரணை புஷ்கலை உடனாய சாஸ்தா குடிகொண்டுள்ளாா். மேகம் திரை கொண்ட சாஸ்தா என்றே சுவாமிக்குத் திருநாமம். சுயம்புச் சிவலிங்கமாகத் தோன்றியிருந்தாலும், வெகு காலத்திற்கு எந்தவித உருவத் திருமேனியும் இல்லாமல் இருந்ததாகவும், பின்னா், மக்களே சாஸ்தா திருமேனியைப் பிரதிஷ்டை செய்து விட்டதாகவும் கூறுகிறாா்கள். எப்படியாயினும், வரலாற்றுப் பெருமையும் ஆன்மிகப் பெருமிதமும் கொண்டு பாவூா்ப் பகுதிகள் பிரகாசிக்கின்றன.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com